பாஜக விஐபிக்களால் இறக்கிவிடப்பட்ட பயணிகள்: மோடி தலையிட்டதால் ஸாரி கேட்ட விமானத்துறை அமைச்சர்
டெல்லி: மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு, பாஜகவின் ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் உதவியாளர் பயணிக்க விமானத்தில் இருந்து 3 பேர் இறக்கவிடப்பட்டதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் 1 மணிநேரம் தாமதமாக கிளம்ப மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு காரணமாக இருந்துள்ளார். மேலும் விமானத்தில் அவர், ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் உதவியாளர் பயணிக்க அதில் இருந்த 3 பேர் கீழே இறக்கிவிடப்பட்டனர்.

அதற்கு முன்பு மும்பையில் இருந்து அமெரிக்கா கிளம்பிய ஏர் இந்தியா விமானம் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸால் 1 மணிநேரம் தாமதமாக கிளம்பியது.
இந்த விவகாரங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டதோடு, இந்த விஐபிக்களின் செயல்கள் ஏற்கத்தக்கவை அல்ல என எச்சரித்துள்ளது.
இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விமானம் தாமதாக கிளம்பியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முதல் விசாரணை அறிக்கை வரட்டும். உண்மையை தெரிந்து கொண்டு நான் என் கடமையை செய்கிறேன்.
இது போன்று விவகாரங்கள் ஏர் இந்தியாவில் மட்டும் அல்ல அனைத்து நிறுவன விமானங்களிலும் வழக்கமாக நடக்கிறது. ஏர் இந்தியா சரியான நேரத்திற்கு விமானத்தை எடுப்பதால் அதை மிஸ் பண்ணுவதாக என் சகாக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள் என்றார்.
2 விமானங்கள் தாமதமாக கிளம்பியது குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications