மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்தேன்: அமைச்சர் நிலோபர் கபில்
மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற ஜெயலலிதாவை தான் சந்தித்ததாக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜெயலலிதாவை தான் சந்தித்தாக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிலா குடும்பத்தினர் அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவை பார்க்க விடாமல் சசிகலா குடும்பத்தினர் அவரை கொன்றுவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ தான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற போது அவரை பார்த்ததாக கூறினார்.
அமைச்சர்களின் இந்த மாறுபட்ட தகவல்களால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை, அமைச்சர்கள் குழுவாக சென்று பார்த்தோம் என தெரிவித்துள்ளார்.
அவரச சிகிச்சை பிரிவில் இருந்து 2-வது வார்டுக்கு மாற்றும் போது ஜெயலலிதாவை சந்தித்தேன் என நிலோபர் கபில் கூறியுள்ளார். மேலும் மற்ற அமைச்சர்களின் கருத்து குறித்து எனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அமைச்சர்கள் முரண்பாடான கருத்துக்களை கூறி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர்களில் யார் சொல்வது உண்மை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.