நான் பொதுச்செயலர் பதவிக்கு நிற்பேன்.. வாங்க, வந்து மோதிப் பாருங்க.. எகிறி அடிக்கும் சசிகலா புஷ்பா!
அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார் சசிகலா புஷ்பா.
டெல்லி: அதிமுகவின் பொதுச்செயலர் பதவிக்கு தாம் போட்டியிடுவேன்... என்னுடன் மோதுகிறவர்கள் போட்டியிட்டு பார்க்கட்டும் என்று சவால்விட்டிருக்கிறாராம் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா.
அதிமுகவின் உயிர் என்பது அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தில்தான் இருக்கிறது. ஓபிஎஸ் அணி பிரிந்து போனதால் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற பஞ்சாயத்து நிலுவையில் உள்ளது.
தினகரன் ஒதுக்கி வைப்பு
இதனால் ஓபிஎஸ் அணியுடன் சமாதானமாவதில் எடப்பாடி கோஷ்டி படுதீவிரமாக இருக்கிறது. இதற்கான துணைப் பொதுச்செயலர் தினகரனை ஒதுக்கி வைப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
சசிகலா புஷ்பாவுடன் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் டெல்லியில் சசிகலா புஷ்பா எம்.பி.யையும் எடப்பாடி கோஷ்டி இன்று சந்தித்து பேசியது. இச்சந்திப்பில் சமாதானமாக தாம் தயராக இல்லை என்பதைத்தான் சசிகலா புஷ்பா வெளிப்படுத்தியிருக்கிறார்.
தேர்தல் நடக்கும்...
அதிமுகவில் இருந்து தம்மை நீக்கி ராஜ்யசபா தலைவருக்கும் செயலருக்கும் ஜெயலலிதா கடிதம் எதுவும் அனுப்பவில்லை; அதனால் நான் அதிமுக உறுப்பினரே என எடப்பாடி கோஷ்டியிடம் கூறியுள்ளார் சசிகலா புஷ்பா. அத்துடன் அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு தேர்தலை நடத்தாமல் ஓயமாட்டேன் எனவும் தெரிவித்திருக்கிறார் சசிகலா புஷ்பா.
பொதுச்செயலர் தேர்தலில் போட்டி
தேர்தல் ஆணையம் மூலமாக அதிமுக பொதுச்செயலர் தேர்தல் நடைபெறும்; அந்த தேர்தலில் தாம் நிச்சயம் போட்டியிடுவேன்; முடிந்தால் மோதிப் பாருங்கள் என ஏகத்துக்கும் டென்சனாக்கியுள்ளார் சசிகலா புஷ்பா. இருப்பினும் வெள்ளைக் கொடி தூக்கி சென்ற எடப்பாடி கோஷ்டி எதுவும் பேசாமல் அமைதி காத்துவிட்டு திரும்பியதாம்.