தேசிய விருதுகளை திருப்பி தர நான் முட்டாள் இல்லை: பிரகாஷ் ராஜ்
தேசிய விருதுகளை திருப்பித்தர நான் முட்டாள் இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதைக் கண்டித்தேனே தவிர எனக்கு தரப்பட்ட தேசிய விருதுகளை திருப்பி தருவதாக கூறவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
மூத்த பத்திரிகையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான கவுரி லங்கேஷ் கடந்த மாதம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். முற்போக்கு சிந்தனையாளர்களை சுட்டுக் கொல்லும் வலதுசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், கவுரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மௌனமாக இருப்பதன் மூலம், என்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருப்பதாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ் இவ்வாறு பேசினார்.
தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற கொடூரச் சம்பவங்களில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனமாக இருக்கிறார். நான் 5 முறை தேசிய விருது வாங்கியுள்ளேன். இந்த நடிப்புக்காக அவருக்குதான் தேசிய விருது வழங்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
What's said...n what's not said. For all out there .. thank you pic.twitter.com/zIT7rnkFxb
— Prakash Raj (@prakashraaj) October 2, 2017
ஆனால் அவர் தனது தேசிய விருதுகளை திருப்பியளிக்க உள்ளதாக சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டன. இதுகுறித்து வீடியோ மூலம் விளக்கம் வெளியிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். அதில், தேசிய விருது தனது உழைப்புக்காக கிடைத்தது என்றும், அதை திருப்பி தர தான் முட்டாள் இல்லை என்றும் கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கன்னட எழுத்தாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு கர்நாடக அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications