வங்கித் துறையில் அடிப்படையிலேயே மாற்றம் தேவை.. நிதி ஆயோக் துணைத் தலைவர்
டெல்லி: இந்திய வங்கித் துறையில் அடிப்படையிலேயே பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
இந்திய வங்கித் துறை மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இந்தியா விஷன் 2030 மற்றும் வங்கித் துறை என்ற தலைப்பில் பேசினார். அப்போது ராஜீவ் குமார் கூறுகையில்,
நீண்ட காலமாக நான் வங்கித் துறையுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். ஸ்டார்ட் அப் மற்றும் ஸ்டாண்ட் அப் ஆகியவற்றை நாம் உறுதிபட செயல்படுத்துவதில்தான் நமது பொருளாதார வளர்ச்சியும் அடங்கியுள்ளது.
வரும் ஆண்டுகளில் வங்கித் துறையின் ஆதரவு விவசாயத் துறைக்கு எந்த அளவுக்குக் கிடைக்கப் போகிறது என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கதாக இருக்கும். தற்போது இந்தியாவின் வர்த்தக வங்கிகள், ரிஸ்க் விஷயத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் போக முடியாத நிலையே உள்ளது.
சிவிசி, சிபிஐ மற்றும் சிஏஜி என 3 "சி"க்களைப் பார்த்து வங்கிகள் பயப்படுகின்றன. இதன் காரணமாகவே வர்த்தக வங்கிகளால் சரியான கோணத்தில் விரிவடைய முடியவில்லை. தங்களுக்கு எது பாதுகாப்பு என்பதை பார்த்துக் கொண்டு செயல்படுகின்றன.
வங்கித் துறை தொடர்பான பிஜி நய்யார் கமிட்டியின் பரிந்துரைகள் நன்றாக உள்ளன. அதேசமயம், கள நிலவரம் குறித்து ரிசர்வ் வங்கி எதுவும் தெரியாமல் இருப்பது கவலைக்குரியதாகும் என்றார் ராஜீவ் குமார்.