வந்தே மாதரத்திற்கு எதிர்ப்பா?.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. "ஒடிஸாவின் மோடி" ஆவேசம்
புவனேஸ்வரம்: வந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள் என மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி கூறியுள்ளார்.
புவனேஸ்வர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய கால்நடைத் துறை, சிறுகுறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி கலந்து கொண்டார். இவர் ஒடிஸாவின் மோடி என அழைக்கப்படுகிறார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறுகையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை மோடி அரசு நீக்கியது. இதற்கு வலுவான எதிர்க்கட்சிகளே ஆதரவு தெரிவித்தன.

ஒருங்கிணைந்த பகுதி
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சியாச்சின் ஆகிய இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸிடம் தெளிவாக கூறியுள்ளார்.

மற்ற மாநிலங்கள்
72 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மக்களுக்கான முழு உரிமைகளை பாஜக அரசு மீட்டு கொடுத்துள்ளது. இதனால் அங்கு அமைதி நிலவுகிறது. காஷ்மீரில் மற்ற மாநிலத்தவர்களும் நிலம் வாங்குவது அதிகரித்துள்ளது.

முட்டி மோதி
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை உலக நாடுகளே ஏற்றுக் கொண்டுள்ளன. எனினும் இந்த நடவடிக்கையால் பயங்கரவாத ஆதரவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முட்டி மோதி இந்த நடவடிக்கையை திரும்ப பெற முயற்சிக்கின்றனர். ஆனால் முடியவில்லை.

துணிச்சல்
மத்திய அரசின் துணிச்சலான நடவடிக்கையால் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏராளமானோர் உயிரிழந்த போது பயங்கரவாதிகளை ஆதரிப்போர் ஏன் கவலைப்படவில்லை. இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள், இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications