”திராவிட மாடல்" மகளிருக்கு ரூ.1,500 வழங்குவோம்.. இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதி!
கங்க்ரா: இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
இமாச்சலப் பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக சார்பாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பாஜக சார்பாக ஜேபி நட்டா, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அளிக்கப்பட்டு வரும் ஏராளமான வாக்குறுதிகள், திமுக தமிழ்நாட்டில் அளித்துள்ள வாக்குறுதிகளாக உள்ளன.
அனல் பறக்கும் குஜராத் தேர்தல் களம்: 43 பேருடன் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!
வேலைவாய்ப்புகள்
இமாச்சலப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கங்க்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பிரியங்கா காந்தி பேசுகையில், இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இது முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இம்முடிவு இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை
அதுமட்டுமல்லாமல், வீட்டிலும், வெளியிலும் வேலை செய்து வரும் பெண்களின் பிரச்சினைகளை அறிவோம். எனவே, அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,500 உரிமைத் தொகை அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதையும் ஆட்சிக்கு வந்ததும் இறுதி செய்வோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பணம் இல்லை என்று பாஜக கூறி வருகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய பணம் இருக்கிறது. அரசு ஊழியர் ஓய்வூதியத்துக்கு மட்டும் பணம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
பள்ளிகள்
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் அரசு சார்பாக 4 ஆங்கில வழியில் கற்பிக்கும் பள்ளிகள் தொடங்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும், போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளில் ஏராளமானவை திமுகவின் வாக்குறுதிகளாக உள்ளன.
திராவிட மாடல்
ஏற்கனவே குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவின் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பின்பற்றியதாக திமுகவினர் பேசி வருகின்றனர். தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டம் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல்களில் பல்வேறு கட்சிகளால் வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு தாண்டியும் திராவிட மாடல் எடுத்து செல்லப்படுவதாக பார்க்கப்படுகிறது.