எதிர்க்கட்சி தலைவர் பதவி மறுக்கப்பட்டால் வழக்கு தொடர சோனியா திட்டம்
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 44 தொகுதிகளே கிடைத்தன. எதிர்க்கட்சியாக ஒரு கட்சிக்கு மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் 10 சதவீத இடங்களையாவது கைப்பற்றுவது அவசியம் என்பது விதிமுறை. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 54 தொகுதிகளையாவது வென்றால்தான் இந்த கணக்கு சரியாகும். இதனால் எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றமாக தற்போதைய நாடாளுமன்றம் காட்சியளிக்கிறது.
ஆனால் தனிப்பட்ட ஒரு கட்சியில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ளது காங்கிரஸ்தான் என்பதால் எங்களுக்குதான் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதால் கோபமடைந்துள்ள காங்கிரஸ், இதுதொடர்பாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
எதிர்க்கட்சி அந்தஸ்து இருந்தால்தான் ஓரளவுக்காவது மக்களிடம் காங்கிரசுக்கு செல்வாக்கை ஈட்ட முடியும், அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாதிட்டு மக்களிடம் நல்ல பெயர் பெற முடியும் என்பது காங்கிரசின் திட்டமாக உள்ளது. இதை தடுப்பது பாஜகவின் முயறச்சியாக உள்ளது.
இதனிடையே போபால் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், 10 சதவீத சீட்டுகளை பிடித்தால்தான் எதிர்க்கட்சியாக ஒரு கட்சியை அங்கீகரிக்க முடியும் என்ற விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர சட்டத்திருத்தம் தேவை என்று கூறினார்.