இதே ‘கெத்’தோட இருந்தா... 2019 லோக்சபா தேர்தல்ல மோடிக்கு போட்டி கெஜ்ரிவால் தான்!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் வரலாற்றுச் சாதனை புரிந்த ஆம் ஆத்மி, இந்த செல்வாக்கை அப்படியே தக்க வைத்துக் கொண்டால், 2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு கடும் சவாலாக கெஜ்ரிவால் உருவெடுப்பார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்ற ஆம் ஆத்மி, கடந்த 2013ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்தைப் பிடித்ததோடு, காங்கிரஸ் ஆதரவோடு டெல்லியில் ஆட்சியையும் அமைத்தது. முதல்வராக பதவியேற்ற கெஜ்ரிவால் 49 தினங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தன் கவனத்தை திருப்பியது ஆம் ஆத்மி. பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் களமிறங்கினார் கெஜ்ரிவால். ஆனால், எதிர்பார்த்த வெற்றி ஆம் ஆத்மிக்கு கிடைக்கவில்லை.

அதிருப்தியும்... மன்னிப்பும்
டெல்லி முதல்வர் பதவியை தடாலடியாக ராஜினாமா செய்ததால், கெஜ்ரிவால் மீதும், ஆம் ஆத்மி கட்சி மீதும் மக்களுக்கு அதிருப்தி உண்டானது. இதனால், சென்ற இடங்களில் எல்லாம் கெஜ்ரிவால் தாக்கப்பட்டார். எனவே, தான் கலந்து கொண்ட கூட்டங்களில் எல்லாம் தனது ராஜினாமா முடிவு தவறானது என மன்னிப்பு கோரினார் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மியின் வெற்றி...
இந்நிலையில், டெல்லியில் மாற்றத்தை விரும்பிய மக்கள் மீண்டும் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தனர். இதனால் நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 67 தொகுதிகள் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது ஆம் ஆத்மி.

நம்பிக்கை...
இதன்மூலம், டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி மீதான நம்பிக்கை இன்னும் அதிகமாகி இருப்பது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.

பலத்த அடி...
நாடாளுமன்றத்தில் அமோக வெற்றி பெற்ற பாஜக, டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மியிடம் பலத்த அடி வாங்கியுள்ளது. மீண்டும் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.

புதிய தேர்தல் முழக்கம்...
மேலும் ஆம் ஆத்மியின் வெற்றியின் மூலம் நாட்டில் புதிய தேர்தல் முழக்கமும் உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி உணவு, உடை, இருக்க இடம் என்ற கோஷத்தை வைத்து வென்றது. பல காலத்திற்கு இதுதான் நடைமுறையிலும் இருந்தது. பின்னர் பாஜக வந்து, மின்சாரம், சாலை, குடிநீர் என்ற கோஷத்தை வைத்து வென்றது. இப்போது ஆம் ஆத்மியின் எழுச்சியின் மூலம் நகர்ப்புற அரசியல் முழக்கம் வலுவடைந்துள்ளது.

பின்னடைவு...
நகர்ப்புற அரசியல் என்பது முன்பை விட அதிகமாக எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது. இதில் மற்ற கட்சிகளை விட ஆம் ஆத்மி முன்னணியில் உள்ளது. நகர்ப்புற வாக்காளர்களை இவர்கள் மிக எளிதாக கவருகிறார்கள். இதில் மற்ற கட்சிகளுக்கு நிச்சயம் பின்னடைவுதான்.

சரியான தண்டனை...
ஊழல் அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க ஆரம்பித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் ஊழல்வாதிகளுக்கு சட்டமும் சரி, மக்களும் சரி சரியான தண்டனையைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

புதிய எழுச்சி...
ஜெயலலிதா சிறைக்குப் போய் வந்து விட்டார். லாலு பிரசாத் ஜாமீனில் வெளியே இருக்கிறார். முலாயம் சிங் யாதவுக்கு வயதாகி விட்டது. நவீன் பட்நாயக் செல்வாக்கு அவரது மாநிலத்தோடு முடிந்து விட்டது. நிதீஷ் குமாரும், மமதா பானர்ஜியும் பெரிய எழுச்சி பெற முடியாமல் உள்ளனர். இந்த நிலையில் கெஜ்ரிவாலின் எழுச்சி புதிதாக உள்ளது. அவரை மக்களும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.

பலத்த எதிர்பார்ப்பு...
இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது ஆம் ஆத்மி. கிடைத்துள்ள இந்த வாய்ப்பை அக்கட்சி சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், ஐந்து ஆண்டுகளும் ஆட்சியில் முழுமையாக நீடித்து மக்கள் மனதைக் கவர்ந்து விட்டால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சவால் விடும் வகையில் ஆம் ஆத்மி வளர்ந்து விடும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மோடிக்கு போட்டி...
மேலும், பிரதமர் மோடிக்கு போட்டியாக பிரதமர் பதவிக்கே களமிறங்குவார் கெஜ்ரிவால் என்றும், கடந்த தேர்தலைப் போல் இல்லாமல் இது இன்னும் கடுமையான சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications