டெல்லி தேர்தல் முடிவுகள் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் எதிரொலிக்குமா? அச்சத்தில் ஆளும் கட்சி
ஸ்ரீரங்கம்: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த கொண்டாட்ட சுவடுகள் மறைவதற்குள், தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. ஆனால் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று கதையில் டுவிஸ்ட் வைத்துள்ளது. இத்தனைக்கும் டெல்லியில் மக்களவை தொகுதி அத்தனையையும் பாஜகதான் வென்றிருந்தது.

டெல்லி மாநிலத்துக்கு பெரும்பாலான அதிகாரங்கள் கிடையாது. காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை மத்திய அரசுதான் நிர்வகிக்கும்.
டெல்லியில் நிலையான ஆட்சியிருந்தால்தான் நான் நிம்மதியாக நாட்டு நலனை கவனிக்க முடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக கெஞ்சினார். ஆனாலும் மக்களோ கேஜ்ரிவாலுக்கு வாக்களித்துள்ளனர்.
மத்தியில் இருந்து முழு ஒத்துழைப்பு கேஜ்ரிவாலுக்கு கிடைக்காது, நிதி உதவிகள் தடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிந்தும், கேஜ்ரிவாலுக்குதான் வாக்களித்துள்ளனர் டெல்லி மக்கள். தங்களது சுயநலத்தைவிட, மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டும், துதிபாடும் விஐபி அரசியலை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை டெல்லி மக்கள் கொண்டிருந்தது நன்கு தெரிகிறது.
இப்போது அப்படியே ஸ்ரீரங்கம் பக்கம் வருவோம். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 38 தொகுதிகளை அதிமுக வென்றிருந்த நிலையில் முழு பலத்தோடுதான் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலை ஆளும் கட்சியான அதிமுக சந்திக்க உள்ளது. கிட்டத்தட்ட டெல்லியில் பாஜக எப்படி பலமோடு இருந்ததோ அதே பலத்தோடுதான் தமிழகத்தில் அதிமுகவும் உள்ளதாக மக்களவை முடிவுகள் காட்டுகின்றன.
ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது என்பதால் ஆளும் கட்சிக்கு வாக்களித்தால்தான் தொகுதி மக்களுக்கு அதிக நிதி உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும் என்ற வாதமும், டெல்லியை போலவே இங்கும் ஒத்துப்போகிறது.
மத்தியில் ஆளும் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எண்ணம் ஒரே வருடத்தில் டெல்லி மக்களுக்கு வந்துள்ளதை போலவே, அதிமுக அரசும் வாக்குறுதிகள் அத்தனையையும் நிறைவேற்றவில்லை என்ற எண்ணம் 4 ஆண்டு கால ஆட்சியில் தமிழக மக்களுக்கும் உள்ளது.
எனவே, டெல்லியை போலவே, ஸ்ரீரங்கம் மக்களும் வாக்களித்துவிடுவார்களோ என்ற அச்சம் ஆளும் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. அப்படியானால் ஸ்ரீரங்கத்தில், பயன்பெறப்போவது பாஜகவா, திமுகவா என்பதும் விவாதிக்கப்பட்டுவருகிறது. ஆனால், தனது நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, ஆளும் கட்சிக்கே வழக்கம்போல தமிழன் வாக்களித்தால், அதிமுக அபார வெற்றி பெறும் என்பதையும் மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications