மோடி பிரதமரானால் நாடு தாங்காது...: பரூக் அப்துல்லா
ஸ்ரீநகர்: மோடி பிரதமரானால் நாட்டையே அழித்து துவம்சம் செய்து விடுவார் எனக் குற்றம் சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா. அதன்படி நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ள அனந்த்நக் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பாஜகவையும், அக்கட்சியின் பிரதம வேட்பாளரான நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தார். மோடி பிரதமரானால் நாட்டிற்கு அழிவு நிச்சயம் என அவர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமர் பதவியில் அமர்ந்தால் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்து விடும். அனைத்து மதங்களையும் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டு விடும்.
கட்சியின் பிற மூத்தத் தலைவர்களை ஓரம் கட்டிய மோடியா என்னையோ அல்லது உங்களையோவா மதிக்கப் போகிறார். சிலர் காங்கிரஸ் அல்லது எங்கள் கட்சியினரால் பாதிப்படைந்திருக்கலாம் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் என்ன செய்தோம் அல்லது என்ன செய்யவில்லை என்பதைப் பற்றி சிந்திக்கும் நேரமல்ல இது. நாட்டைப் பற்றி சிந்திக்கும் நேரம், நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தருணம்...' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.