3 மணி நேரத்திற்கும் மேல் தாஜ் மஹாலை சுற்றி பார்த்தால் அபராதம்.. சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி
ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்குள் சுற்றுலாப் பயணிகள் 3 மணி நேரத்திற்கும் மேல் இருந்தால், நுழைவு டிக்கெட் விலையே அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். முழுக்க பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. காதலின் சின்னமாக அமைந்துள்ளதால் தாஜ் மஹால் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. முகலாய மன்னன் ஷாஜகானால், இறந்து போன அவனது மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு தாஜ் மஹால் கட்டமைக்கப்பட்டுள்ளது
1631 முதல் 1654 ம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த தாஜ் மஹாலை பார்வையிட தினமும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் இந்திய மாநிலங்களில் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்
சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் கடந்த ஆண்டு சமீபத்தில் தாஜ் மஹாலின் நுழைவுக்கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.250-ஆக உயர்த்தப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு கட்டணம் ரூ.1300-ஆக உயர்த்தப்பட்டது இதற்கே சுற்றுலாப் பயணிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது
மக்களின் கடும் அதிருப்தியை பொருட்படுத்தாத உத்தரப்பிரதேச அரசு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது தாஜ் மஹாலை சுற்றி பார்க்க வருவோர், அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே பார்வையிடலாம் என அறிவித்தது. இந்த உத்தரவை அறிவித்த வேகத்திலேயே செயல்பாட்டிற்கும் கொண்டு வந்துவிட்டது மாநில அரசு.
கடந்த ஓராண்டிற்கும்மேலாக இந்த நிபந்தனை அமலில் உள்ள நிலையில், தற்போது இந்த உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாஜ் மஹால் வளாகங்களில் சமீபத்தில் டெர்ன்ஸ்டைல் கேட்டுகள் பொருத்தப்பட்டன.
இதனால் சுற்றுலா பயணிகள் தாஜ் மஹால் வளாகத்திற்குள் வரும் நேரமும், வெளியே செல்லும் நேரமும் பதிவாகும். இதனையடுத்து தாஜ் மஹாலுக்குள் அனுமதிக்கப்பட்ட 3 மணி நேரத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் இருந்தால், டிக்கெட் விலையே அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள தொல்லியல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர், தாஜ் மஹாலின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு புள்ளியில் ஏழு டெர்ன்ஸ்டைல் வாயில்கள் நிறுவப்பட்டுள்ளன. வெளியேறுவதற்கு 5 வாயில்கள் உள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு, தனித்தனி வாயில்கள் உள்ளன.
பயணிகள் பெறும் நுழைவு சீட்டானது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் 3 மணி நேரம் தாண்டி சுற்றுலாப் பயணிகள் ஒரு நிமிடம் கழித்து வந்தாலும், முன்பு செலுத்திய டிக்கெட் தொகையையே வெளியேறும் கேட் கவுண்டரில் மீண்டும் செலுத்தி விட்டு தான் வெளியேற முடியும் என கூறினார்.
மேலும் தகவல் தெரிவித்த அந்த அதிகாரி நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நுழைவு நேரத்துக்கு பதிலாக, தாமதமாக சுற்றுலா பயணிகள் வந்தால் தாஜ் மஹாலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படும். பின்னர் புதிய நுழைவு சீட்டு வாங்கிய பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்
தொல்லியல் துறையின் இந்த நிபந்தனைகளுக்கு உள்ளூர் பொது மக்கள் மட்டுமல்லாது மாநிலம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்