மும்பையில் காணாமல் போன இளைஞர் விசாகப்பட்டினத்தில் கொலை
மும்பை: மும்பை ஐஐடியில் பிஹெச்டி படித்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் விசாகப்பட்டினத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் விடுதி அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஷிவ் தேஜா என்ற அந்த 26 வயது இளைஞர், கடந்த வாரம் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள விடுதி அறையின் குளியலறை ஒன்றில் பாலிதீன் பை ஒன்றில் சுற்றப்பட்டிருந்த உடல் ஒன்றினை போலீசார் கண்டு பிடித்தனர்.
அந்த உடல் அழுகிய நிலையில் இருந்தது. கழுத்துவரை மூடப்பட்ட முகம் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டிருந்தது. கைகளும், விரல்களும் டேப்பினால் சுற்றப்பட்டிருந்தது.
விசாரணையில் அது கடந்த வாரம் காணாமல் போன ஷிவ் தேஜா என்பது தெரியவந்தது. ஷிவ் தேஜாவின் பெற்றோர்கள் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர்.
மும்பையில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்ள பாவை கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்த ஷிவ் தேஜாவை பார்க்க அவரது பெற்றோர்கள் கடந்த வாரம் சென்ற போது அங்கு அவர் இல்லை. போலீசில் புகார் கொடுத்த அவர்கள், விசாகப்பட்டினம் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேடத் தொடங்கினர்.
இந்த நிலையில் ஷிவ் தேஜா சடலமாக சனிக்கிழமையன்று ஓட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஷிவ் தேஜாவின் குடும்பத்தினருக்கு விசாகப்பட்டினத்தில் உறவினர்கள் இருக்கின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மும்பை ஐஐடி வளாகத்தில் பல ஆண்டுகளாக தங்கியிருக்கும் ஷிவ் தேஜா பிடெக், எம்.டெக் படிப்பை முடித்துவிட்டு அங்கேயே பிஹெச்டி ஆராய்ச்சி படிப்பை தொடங்கியுள்ளார்.
மனஅழுத்தத்தினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தாரா? என்பது பற்றியும் அவருடைய பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் படிப்பில் எந்த வித சிக்கலும் இல்லாமல் நன்றாக படிக்கக் கூடிய மாணவர்கள் என்று பேராசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர் ஷிவ் தேஜாவின் மரணத்தினால் அதிர்ச்சியடைந்துள்ள அவரது துறை மாணவர்கள் இன்று மாலை இரங்கல் கூட்டம் நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications