மாயமான சென்னை ஐஐடி மாணவி டேராடூன் போலி சாமியாரின் ஆசிரமித்திலிருந்து மீட்பு
டேராடூன்: சென்னை ஐஐடியில் இருந்து மாயமான மாணவி பிரதியுஷா டேராடூன் அருகே போலி சாமியாரின் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பரோடிபேட்டையைச் சேர்ந்த வேதாந்தம் எல். பிரதியுஷா(26) என்பவர் சென்னை ஐஐடியில் படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தவர் கடந்த மாதம் 17ம் தேதி திடீர் என்று மாயமானார்.
ஆன்மீக பாதையை தேடி இமய மலைக்கு செல்வதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது. அவர் கோவையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் மும்பைக்கு ரயிலில் சென்றதை சென்னை போலீசார் கண்டுபிடித்தனர்.
பிரதியுஷாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் டேராடூன் அருகே இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் உத்தராஞ்சல் போலீசார் உதவியுடன் பிரதியுஷாவை தேடி இறுதியில் அவர் சிவ குப்தா என்பவரின் ஆசிரமத்தில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டனர். சிவ குப்தா தன்னைத் தானே ஒரு சாமியார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அவரின் ஆசிரமதித்தில் சிறுமிகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமான பெண்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் விரும்பி அங்கு இருப்பதால் போலீசார் குப்தா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பிரதியுஷாவின் தந்தை சென்னை போலீசாருக்கு போன் செய்து தங்கள் மகள் காணாமல் போனதாக அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications