வங்கிகளில் புது நோட்டுகளை இப்படியும் வாங்கலாம் ...!
வங்கியில் சிலர் முறைகேடாக புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுச் செல்வது போன்ற வீடியோ வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.
டெல்லி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வரிசையில் நின்று வாங்காமல் வங்கியின் பின்புறம் சென்றும் வாங்கலாமாம்.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இருந்து அதை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கு மக்கள் தவம் கிடக்கின்றனர். ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை ரூ. 2500 ஆக மத்திய அரசு உயர்த்தியது.

அதேபோல தனி நபருக்கு ரூ. 4000 வரை பண மாற்றம் செய்யலாம் என்று இருந்ததையும் ரூ. 4500 ஆக உயர்தியது. அதுவும் பணத்தை மாற்றுவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அத்யாவசிய பொருட்கள், மருத்துவமனை செலவு மளிகை சாமான் என அன்றாட தேவைகளுக்காகவும் கையிலிருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகள் முன்பு கால்கடுக்க காத்திருப்பது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.
இந்த நிலையில் சிலர் முறைகேடாக வங்கியில் பணத்தை மாற்றி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு எந்த நிபந்தையும் கிடையாதாம். அந்த வகையில் வட மாநிலம் ஒன்றில் வங்கியின் பின் பக்கத்தில் சிலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு திடீரென்று வங்கியின் உள்ளே இருந்து ஒரு சிக்னல் கிடைக்கிறது. சிக்னல் வந்தவுடன் வங்கியின் பின்னால் உள்ள ஜன்னலில் இருந்து வரும் பணத்தை வெடுக்கென பெற்றுக்கொண்டு ஒன்றும் தெரியாததைப்போல் செல்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாமலும், கையில் உள்ள பணத்தை செலவழிக்க முடியாமலும் சாதரண மக்கள் சிரமப்படும் நேரத்தில் இப்படியும் சிலர் மாற்றிச் செல்வது வேதனைக்குரியது.












Click it and Unblock the Notifications