2000 ரூபாய் நோட்டை வெளியிட்டதே முதலில் சட்டவிரோதம்.. சாட்டையை சுழற்றும் காங்.
ரூபாய் நோட்டு ஒழிப்பு அறிவிப்பும், 2000 ரூபாய் நோட்டு வெளியீடும் சட்டவிரோதமான செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி: ரூ. 2000 நோட்டு வெளியிட்டதில் சட்டத்தை மத்திய அரசு பின்பற்றவில்லை. இந்த ரூபாய் நோட்டை வெளியிட்டதே முதலில் சட்டவிரோதமாகும் என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
இந்த விவகாரத்தை சும்மா விடப் போவதில்லை என்று கூறியுள்ள காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்த விவகாரத்தை எழுப்பப் போவதாகவும் எச்சரித்துள்ளது.
நாட்டை மிகப் பெரிய நிதிக் குழப்பத்தில் பிரதமர் மோடி தள்ளி விட்டதாக கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அனந்த் சர்மா, ரிசர்வ் வங்கி சட்டத்தை மீறும் வகையில் மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சட்டவிரோத செயல்
இதுகுறித்து அனந்த் சர்மா கூறுகையில் ரிசர்வ் வங்கியின் சட்டத்தை இதில் மத்திய அரசு பின்பற்றவில்லை. சட்டவிரோதமான முறையில் 2000 ரூபாய் நோட்டை அது வெளியிட்டுள்ளது.
மை வைப்பது கொடுமை
அதேபோல ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்கு வருவோருக்கு விரலில் மை வைப்பதும் அராஜகமான நடவடிக்கை. கொடுமையானது. அத்தனை கட்சிகளுடனும் இணைந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் பெரிதாக்கும். மக்களைத் திரட்டிப் போராடுவோம்.
திசை திருப்புகிறார் மோடி
பல முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மொத்தமாக மக்களைத் திசை திருப்ப முயல்கிறார் மோடி. மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார். கறுப்புப் பண மீட்பு, தேசபக்தி என்ற பெயரில் மக்களை சிரமப்படுத்துகிறார்.
பிரதமரே பொறுப்பு
நாடு பெரும் நிதிச் சிக்கலில் சிக்கித் தவிக்க பிரதமரே முழுக் காரணம் ஆவார். அவரே இதற்குப் பொறுப்பு. அரசியல் சாசனச் சட்டம் 360வது பிரிவை அமல்படுத்தாமலேயே நெருக்கடி நிலையை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.
சட்டப்படி தவறு
நவம்பர் 8ம் தேதி பிரதமர் வெளியிட்ட அறிவிப்பே முதலில் சட்டப்படி தவறாகும். எந்த வகையிலும் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கை இல்லை இது என்றார் அனந்த் சர்மா.