தமிழகத்துக்கான மருத்துவ இடங்களை அகில இந்திய கோட்டாவுக்கு ஒதுக்க வேண்டும்.. இந்திய மருத்துவ கவுன்சில்
தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கவுன்சிலிங்கை தொடங்காவிட்டால் அந்த மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அகில இந்திய கோட்டாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் கோரியது
டெல்லி: தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங் தொடங்க கால அவகாசம் வழங்கப்படாது என்றும் தாமதப்படுத்தினால் தமிழகத்துக்கான மருத்துவ இடங்களை அகில இந்திய கோட்டாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் கோரியது.
தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் நேற்று மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மருத்துவ சேர்க்கைக்கு தமிழகத்துக்கு கால அவகாசம் அளிக்க முடியாது. மருத்துவ சேர்க்கைக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதியாகும். நீட் விவகாரத்தில் தமிழகத்தின் செயல்பாட்டை ஏற்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழக அரசின் நீட் விலக்கு அவசர சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
மேலும் மருத்துவ கவுன்சிலிங்கை கொடுக்கப்பட்ட காலஅவகாசத்துக்குள் நடத்தாவிட்டால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அகில இந்திய கோட்டாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது.