கூட்டு பாலியல் வன்கொடுமையில் சிக்கிய சிறுமி! குற்றவாளியை சடலமா மீட்ட போலீஸ்! அசாமில் சலசலப்பு
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பும்போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இதில் குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸ் கைது செய்திருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை பிரச்னை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், இந்த சம்பவத்தின் பரபரப்பு குறைவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.

அதாவது அசாமில் நாகோன் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு சாலையோரம் சிறுமி ஒருவர் மயக்கமான நிலையில் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து போலீசாருக்கு விசாரணை நடத்தியதில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
சிறுமி டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பும்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எனவே சம்பவம் நடந்த நேரத்தில், அந்த பகுதியில் ஆக்டிவாக இருந்த செல்போன் எண்கள் டிரேஸ் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல், சம்பவம் நடந்த பகுதியை கடந்து சென்றவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய நபராக, இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மறுபுறம் இந்த சம்பவத்தை கண்டித்து, உள்ளூர் மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்மையான குற்றவாளி கைது செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் கூறியிருந்தனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், "இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.
சூழல் இப்படி இருக்கையில், கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய இளைஞர், இன்று அதிகாலை குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து அம்மாநில போலீசார் கூறுகையில், "நாங்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் இளைஞரை குற்றம் நடந்த பகுதிக்கு அழைத்து சென்றிருந்தோம். அங்கு அவர், குற்றத்தை எப்படி செய்தார் என்பதை எங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இது விசாரணை நடைமுறையின் ஒரு பகுதி.
ஆனால் இந்த நேரத்தில் அவர் எங்களிடமிருந்து தப்பிக்க முயன்றார். பக்கத்தில் உள்ள குளத்தில் குதித்த அவர், நீந்தி கரையை கடக்க முயன்றார். நாங்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தோம். குளத்தை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினோம். ஆனால், இளைஞரை சடலமாகவே மீட்க முடிந்தது" என்று கூறியுள்ளனர்.
குற்ற சம்பவத்தில் மொத்தம் 3 பேர் ஈடுபட்டிருக்கின்றனர். இவர் மூன்றாவது நபர் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications