புத்தாடை அணிந்து வாக்களித்த இளசுகள்! பொட்டு வைத்து கவுரவித்த மக்கள்! சத்தீஸ்கர் தேர்தலில் நெகிழ்ச்சி
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று இரண்டாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இதில் வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு மக்கள் திலகமிட்டு கவுரவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நேற்று (நவம்பர் 17ம் தேதி) தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் மொத்தம் 40.78 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியில் இருந்து வரும் நிலையில், இந்த முறை ஆட்சியை யார் கைப்பற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 68.15 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. கரியாபண்ட் மாவட்டத்தின் பிந்த்ரனாவகர் தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. பிந்த்ரனாவகர் தொகுதியில் நச்சலைட்களின் அச்சம் காரணமாகக் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 3 மணியுடன் முடிவடைந்திருக்கிறது. 22 மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளில் 827 ஆண்கள், 130 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 958 வேட்பாளர்கள் களம் கண்டிருக்கின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டும் இரண்டு கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 72 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 76.62 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அதனுடன் 2023 நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடுகையில் வாக்குப்பதிவு எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால் இந்த முறை முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக உற்சாகத்துடன் வாக்களித்துள்ளனர். முதியோர்களும், பெண்களும், மாற்றுப் பாலினத்தவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் வாக்களிக்க உதவும் வகையில் சக்கர நாற்காலி, சாய்வு தளம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சத்தீஸ்கர் மாநிலத்தின் யூடியூபர்களின் கிராமம் என்று அழைக்கப்படும் 'துளிசியில்' முதல் தலைமுறை வாக்காளர்கள் புது துணி உடுத்தி மிகுந்த மகிழ்ச்சியுடன் வாக்களித்துள்ளனர். அதேபோல வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு மக்கள் கவுரவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications