டெல்லியில் கொட்டும் மழைக்கு இடையில் தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம் !
டெல்லி: டெல்லியில் கொட்டும் மழைக்கு இடையில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரியும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு, தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை ஜந்தர் மந்தர் பகுதியில் மழை பெய்தது. அந்த மழையிலும் கலைந்து செல்லாமல் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 23வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது இன்று காலையில் எட்டு மணியளவில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கை, கால்களைக் கட்டிக்கொண்டு சாலையில் உருளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து டெல்லியில் கனமழை பெய்தது. வெயில்வாட்டி வந்த நிலையில் மழையால் வெப்பம் தனிந்து குளிர்காற்று வீசியது. இதையடுத்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications