ஹைதராபாத்தில் இரண்டு மாதங்களில் 26 பெற்றோர் ஜெயிலில் அடைப்பு... காரணம் என்ன தெரியுமா?
மைனர் குழந்தைகளை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி அளித்ததாக, ஹைதராபாத்தில் இரண்டு மாதங்களில் 26 பெற்றோர் சிறையில் அடைப்பு.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கடந்த இரண்டு மாதங்களில் போலீசார் நடத்திய திடீர் சோதனைகளில், 26 பெற்றோர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். காரணம் என்ன தெரியுமா? அவர்களுடைய மைனர் மகன் அல்லது மகள் ஓட்டுவதற்கு டூவீலர் கொடுத்ததுதான்.
சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், 18 வயதுக்குட்பட்ட சிறுவன் அல்லது சிறுமி டூவிலர்களை ஓட்டி, போலீசில் சிக்கினால், அவர்களுடைய பெற்றோர்களை சிறையில் அடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் நாடு முழுவதுற்கும் பொருந்தும்.

ஹைதராபாத் போலீசார் இந்த சட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். காரணம், 2016ல் அங்கு மைனர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது என 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில், 2017ல் இது 14,000க்கும் அதிகமானது.
அதையடுத்து மைனர்கள் வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்வது, தண்டனை அளிப்பது ஹைதராபாத்தில் இந்தாண்டில் தீவிரபடுத்தப்பட்டது. பிப்ரவரியில் நடந்த அதிரடி போலீஸ் சோதனையில் 1079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 60 மைனர்களின் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
13, 14 வயது சிறுவர்கள், சிறுமிகள் கூட டூவிலரில் பறப்பது ஹைதராபாத்தில் ரொம்ப சகஜமாகிவிட்டது. அதனால், போலீஸ் நடவடிக்கை மேலும் தீவிரமானது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இவ்வாறு வாகனம் ஓட்டிய மைனர்கள் மீது 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 26 பெற்றோர் கம்பி எண்ண நேர்ந்துள்ளது.
பெற்றோர்களே உஷாராக இருங்க. வீட்டில் நீங்கள் கொடுக்கும் குடைச்சல்களுக்கு பழிவாங்குவதற்காக, உங்களுடைய மைனர் குழந்தைகள் டூவிலர்களை எடுத்தும் செல்லலாம். டூவிலர்களை வாங்கித் தருவதை, அதை ஓட்டுவதற்கு அனுமதிப்பதை நிறுத்தினால் பெற்றோர்களுக்கு நல்லது.












Click it and Unblock the Notifications