பண்ணை இல்ல நில ஒதுக்கீட்டு மோசடிப் புகாரிலிருந்து மாயாவதி விடுவிப்பு
டெல்லி: உ.பி. மாநிலம் நொய்டாவில், பண்ணை இல்லங்களுக்காக நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் முதல்வர் மாயாவதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாயாவதி முதல்வராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அதாவது நொய்டா பகுதியில் பண்ணை இல்லங்களுக்கான நில ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பா புகாரை லோகாயுக்தா விசாரித்து வந்தது.
இந்த விசாரணையின் இறுதியில், மாயாவதி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை என்றும், பண்ணை இல்ல ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கவில்லை என்றும் தற்போது லோகாயுக்தா நீதிபதி என்.கே.மஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.

உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்தான், இந்த விசாரணைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009ம் ஆண்டு மாயாவதி முதல்வராக இருந்தபோது நொய்டா பகுதியில் மொத்தம் 150 பண்ணை வீடுகளுக்கான நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவை ஒளிமறைவில்லாமல் செய்யப்படவில்லை என்றும் அடிமாட்டு விலைக்கு நிலம் விற்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த விற்பனை காரணமாக நொய்டா வளர்ச்சி குழுமத்திற்கு ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்தே லோகாயுக்தா விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அந்தப் புகாரிலிருந்து தற்போது மாயாவதி விடுவிக்கப்பட்டிருப்பதால் யாதவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications