பாஜகவுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமே குடிநீர்! ம.பியில் புது சர்ச்சை.. காங்கிரஸ் கடும் விமர்சனம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 3ம் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முழு ரிசல்ட்டும் வெளியாகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் முங்காவாலி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நயகெடா கிராமத்தில் இந்த பிரச்னை எழுந்திருக்கிறது. இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "நாங்கள் போர்வெல்லில் தண்ணீர் பிடிக்க போகும்போது அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தீர்களா? என்று கேட்டு சத்தியம் செய்ய சொல்கிறார்கள். நாங்கள் இல்லை என்ற சொன்னால் உடனே மோட்டாரை ஆஃப் செய்துவிட்டு அங்கிருந்து விரட்டிவிடுகிறார்கள். இதனால் எங்களால் குடிநீரை பெற முடியவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் "சிலர் பாஜக எனும் பெயரை பயன்படுத்தாமல் பாஜவின் தேர்தல் சின்னமான தாமரையை குறிக்கும் பூ எனும் வார்த்தையை குறிப்பிட்டு, வாக்களித்தீர்களா என சத்தியம் கேட்கிறார்கள். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் இரவில் மட்டும் மோட்டார் இயக்கப்பட்டு பாஜகவுக்கு வாக்களித்த ஆட்களுக்கு மட்டும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு பதிலளித்துள்ள மாநில அமைச்சர் பிரிஜேந்திர சிங் யாதவ், "ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? நான் அப்பகுதி மக்கள் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக 4 ஆழ்துளை கிணறுகளை அமைத்திருக்கிறேன்" என்று விளக்கமளித்துள்ளார்.
கிராம மக்களின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. "பாஜகவின் கொடூர செயலை பாருங்கள். தங்களுக்கு வாக்களிக்காதவர்களை தண்ணீரின்றி கொல்வதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். ஊழலுக்கும், தவறான நிர்வாகத்திற்கும், அட்டூழியங்களுக்கும் மத்தியப் பிரதேச மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்" என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால் இந்த தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் பயங்கர டஃப் கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications