மும்பை மருத்துவமனையில் சக நோயாளியை அடித்து கொன்ற நபர்: 2 பேர் படுகாயம்
மும்பை: மும்பை மருத்துவமனையில் நோயாளி ஒருவர் திடீரென நடத்திய தாக்குதலில் சகநோயாளி ஒருவர் பரிதாபமாகப் பலியானார். மேலும், காயமடைந்த இருவர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் எய்ட்ஸ் மற்றும் சிறுநீகர பாதிப்பு நோயால் அனுமதிக்கப்பட்டு இருந்த 42 வயது நோயாளி ஒருவர், நேற்று திடீரென சகநோயாளிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஜெனரல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நோயாளி, அங்கிருந்த குளுக்கோஸ் மற்றும் ரத்தம் ஏற்ற பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியை கொண்டு தனக்கு அருகில் இருந்தவர்களைத் தாக்கியுள்ளார்.
இதில்,அதே மருத்துவமனையில் காசநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று கொண்டிருந்த லிலாபியாரி தாகூர் (65) என்பவர் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக ஐசியூவிற்கு மாற்றப்பட்ட தாகூர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இத்தாக்குதல் தொடர்பாக தாகூரின் மகன் கூறுகையில், ‘அந்த மனிதனுக்கு என்ன ஆனது எங்களுக்கு தெரியாது. அவர் தீடிரென்று நான்கவது வரிசைக்கு வந்து அங்கிருந்த எனது தந்தை மற்றும் பிற நோயாளிகள் மீது தாக்குதல் நடத்தினார். எனது தந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டார். மதியத்துக்கு பிறகு அவர் இறந்த செய்திதான் எங்களுக்கு கிடைத்தது' என்றார். நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக இருந்தவர் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய அந்த நோயாளியை கைது செய்தனர். தாக்குதல் நடத்திய அந்த மர்ம நோயாளி குறித்த விவரமான தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், இத்தாக்குதல் சம்பவத்தில் அதே மருத்துவமனையில் இருந்த 70 வயது பிராபுல்சந்த பர்மர் என்ற நோயாளியும், அவரை பார்க்க வந்த உறவினர் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
எதற்காக இத்தகைய கொலைவெறித் தாக்குதலில் அந்த நோயாளி ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.