அம்பேத்கரை இழிவுபடுத்துவதா? அமித்ஷா மன்னிப்பு கேளுங்க.. நாடாளுமன்றத்தை முடக்கிய இந்தியா கூட்டணி!
டெல்லி: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று முடக்கினர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். ராஜ்யசபாவில் நேற்று பேசிய அமித்ஷா, பேஷனுக்காக அம்பேத்கர்.. அம்பேத்கர் என பேசுவதாக கிண்டல் செய்திருந்தார். அமித்ஷாவின் இந்தப் பேச்சைக் கண்டித்துதான் இந்தியா கூட்டணி கொந்தளிக்கிறது.
ராஜ்யசபாவில் நேற்று அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என பேசுவது பேஷனாகிவிட்டது.. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைத்திருக்கும். இருந்த போதும் அம்பேத்கர் பெயரை காங்கிரஸ் கட்சியினர் இப்போது உச்சரிப்பது பாஜகவுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் உண்மையான உணர்வுகளுடன் செயல்பட வேண்டும் என்றார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக போராட்டமும் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைகளில் அம்பேத்கர் படங்களை ஏந்தி நின்று ஜெய்பீம்! ஜெய்பீம் என முழக்கமிட்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவே! மன்னிப்பு கேள் எனவும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கோஷமிட்டனர்.
#WATCH | Delhi: Opposition MPs hold protest against Union Home Minister Amit Shah's speech in the Rajya Sabha during the Constitution debate yesterday.
— ANI (@ANI) December 18, 2024
MPs allege Union HM insulted Dr BR Ambedkar in his speech yesterday. pic.twitter.com/9e5v3KV4Jl
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, திமுக டிஆர் பாலு எம்பி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடியது. இரு சபைகளிலும் அமித்ஷாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு சபை நடவடிக்கைகளும் முடங்கின. லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல ராஜ்யசபாவிலும் கடும் அமளி தொடர்ந்தது. இதனையடுத்து ராஜ்யசபாவும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி குமாரி செல்ஜா கூறுகையில், பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா என்ன கூறினார் என்பதை நாடு அறியும். அரசியல் சாசனம் என்பது நாட்டு மக்களுக்கு மிகவும் புனிதமானது. அரசியல் சாசனம் புனிதமானது எனில் அதை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர், கடவுளுக்கு குறைவானவர் அல்ல. பாபாசாகேப் அம்பேத்கரை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அமித்ஷா இப்படி பேசியுள்ளார் என்றார்.
காங்கிரஸ் எம்பி கிரண்குமார் சமாலா கூறுகையில், அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரிக்கக் கூடாது என்பதை நோக்கமாக கொண்டதாக அமித்ஷா பேச்சு அமைந்துள்ளது. இதனால்தான் அம்பேத்கரை நினைவுகூறும் வகையில் இன்று நாங்கள் போராட்டம் நடத்தினோம். நாட்டின் தேசியக் கொடியையோ அரசியல் சாசனத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் விரும்பவே இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. பாஜக- ஆர்.எஸ்.எஸ்.-க்கு சொந்த அஜெண்டாதான் முக்கியம். அதனையே மக்கள் மீது திணிக்கவும் முயற்சிக்கின்றனர். இத்தகைய அணுகுமுறையால்தான் மக்கள், பாஜகவுக்கு பெரும்பான்மையை வழங்கவில்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications