அடிக்கடி வெளிநாடு சுற்றுப் பயணங்கள் ஏன்?: சிறப்பு பேட்டியில் மனம் திறந்த பிரதமர் மோடி!
டெல்லி: நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அதிகாரத்துக்கு வந்து ஓராண்டாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
அதுகுறித்த விவரம்:
கே: ஓராண்டு கால பிரதமர் அனுபவம் பற்றி சொல்லுங்கள்
ப: நான் பதவியேற்ற பிறகு, குடிமை சேவைகள் முற்றிலுமாக நிலைகுலைக்கப்பட்டிருப்பதையும், அவர்கள் திறமை மழுங்கடிக்கப்பட்டிருந்ததையும் பார்த்தேன். அமைச்சரவை வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் குலைக்கப்பட்டிருந்தது. நிலைமையை சீர் செய்ய வைப்பது பெரும் சவாலாக இருந்தது.
கே: அடிக்கடி பாரீன் போறதா எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே?
ப: நாம் பெரிய நாடு என்ற தோரணையில், அகங்காரமாக பிற நாடுகளை புறக்கணித்தால், அதன் இழப்பை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. உலக அரங்கில் இந்தியா தனித்து வைக்கப்படுவதால் நமக்கு தீமைதான். முன்னாள் ஆட்சியாளர்களுக்கு, எனது ஆட்சியில் குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. எனவே, எனது வெளிநாட்டு பயணங்களிலும், நான் எத்தனை நாள் சுற்றுப் பயணம் செய்கிறேன் என்பதிலும் கவனம் வைத்துள்ளனர். சமீபத்திய பல்வேறு ஆய்வுகள் எனது அரசின் வெளிநாட்டு கொள்கைக்கு அதிகப்படியான ஆதரவை பெற்றுத் தந்துள்ளன.
கே: தூய்மை இந்தியா பற்றி கூறுங்கள்
ப: தூய்மை இந்தியா வெறுமனே சுத்தீகரிப்பு தொடர்பானது மட்டுமல்ல. மானம், மரியாதை தொடர்பானது. பள்ளிகளில் கழிவறையை கட்டியதன் மூலம், பெண் பிள்ளைகள் மாண்பு காப்பாற்றப்படுகிறது. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில், இதைக் கூட செய்யாமல் விட்டுள்ளார்கள் என்பது துரதிருஷ்டவசமானது.
கே: கருப்பு பண மீட்பு நிலை எப்படியுள்ளது?
ப: கருப்பு பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது இந்த அரசுதான். கருப்பு பண பதுக்கலுக்கு எதிராக வலிமையான சட்டம் கொண்டு வந்துள்ளோம். கடந்த ஆண்டு நவம்பரில் ஜி20 நாடுகள் கூட்டமைப்பில், வரி ஏய்ப்பு தடுப்பு மற்றும், தகவல் பரிமாற்றங்களுக்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.