என்ன நடக்குது எல்லையில்.. உண்மையில் என்ன பிரச்சனை.. இந்தியா மீது சீனா போர் தொடுக்குமா.. பரபர தகவல்
ஸ்ரீநகர்: லடாக் எல்லையில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. இதேபோல் சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் வீரர்களை குவித்து வருகிறது. இதனால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்தியா சீனா இடையே போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்றால்? மிக அரிதானதுதான்.
Recommended Video
கடந்த சில நாள்களில் லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் 5000க்கும் மேற்பட்ட வீரர்களை குவித்துள்ளது. சீன வீரர்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். சில இடங்களில் சாலைகள், பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது. அத்துடன் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லாக் எல்லையில் வீரர்களை நிறுத்தியுள்ளது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளதாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இரு நாட்டு கமாண்டர்கள்மட்டத்திலான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தியாவுக்கு சொந்தமான கால்வன் பள்ளத்தாக்கை சீனா குறி வைப்பது ஏன்?.. எல்லையில் என்ன நடக்கிறது?
சீனா கண்டிப்பு
சீன ராணுவம் எல்லையில் உள்கட்டமைப்பு பணிகளை செய்வதை இந்தியா கண்டிக்கிறது. இதேபோல் இந்திய ராணுவம் சீன எல்லையில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதை சீனா கண்டிக்கிறது. இதற்கிடையே லடாக்கில் இந்தியா ராணுவம் பாலம் அமைக்கும் பணியினை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனால் கிழக்கு லடாக் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் குறைந்த தொலைவு இடைவெளியில் நேருக்கு நேர் முகாமிட்டுள்ளனர். இது ஒருபுறம் எனில் திபெத்தில் உள்ள நகாரி குன்சா விமானப்படை தளத்தில் சீன ராணுவம் கட்டுமானப் பணிகளை அதிகரித்துள்ளது. இந்த இடம் படைகள் குவிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
அச்சுறுத்துகிறது சீனா
கொரோனா பிரச்சனைக்கு நடுவில் சீனா இப்படி படைகளை குவித்து வருவதை இந்தியா வழக்கமான எல்லைப் பிரச்சனையாக பார்க்கவிலலை. இந்திய எல்லையில் படைகளை குவித்துவைத்து இந்திய ராணுவத்துக்கு நெருக்கடி அளிக்க சீனா விரும்புவதாக இந்தியா பார்க்கிறது. இந்திய எல்லையில் எந்ந் வசதியையும் மேம்படுத்தக்கூடாது என்று சீனா உறுதியாக உள்ளது. அதற்காகவே இந்த படைகள் குவிப்பு அஸ்திரத்தை எடுத்துள்ளது. இந்தியாவும் சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் படைகளை குவித்து வருகிறது.
படைகள் தயார்
இதற்கிடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் ராணுவ தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசும் போது சீன நாட்டு வீரர்கள் போருக்கு தயார் ஆக வேண்டும். அவர்கள் தீவிரமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும். சீனாவை காக்க, அதன் கட்டமைப்பை காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார். ஆனால் எந்த இடத்திலும் இந்தியாவை பற்றியோ வேறு எந்த நாட்டை பற்றியோ குறிப்பிடவில்லை.
சீனா கடும் கோபம்
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்த கொரோனா பிரச்னையால் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன. இந்த சூழலில் அண்மையில் லடாக்கில் சீனா அத்துமீறலை அமெரிக்கா கடுமையாக கண்டித்தது. அப்போது பேசிய அமெரிக்க அதிகாரி, சீனா எப்போதுமே பிறநாட்டு எல்லைகளில் அத்துமீறுவது வாடிக்கையாக உள்ளது. அது இந்தியாவாக இருந்தாலும் சரி சீன கடலாக இருந்தாலும், அடவாடியாக நடந்து கொள்கிறது என்றார். இந்த பேச்சை சீனா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்திய சீன எல்லை பிரச்சனையில் அமெரிக்கா முட்டாள்தனமாக கருத்து தெரிவிப்பதாக கடுமையான கண்டனத்தை சீனா அப்போது பதிவு செய்தது.
படைகள் குவிப்பு
அதன்பிறகான அடுத்தடுத்த நாளில் தான் எல்லையில் படைகள் குவிப்பு போர் பதற்றம் என்று இருநாடுகளிலும் கொரோனாவுக்கு இடையே சூழல் மாறி உள்ளது. ஆனால் உண்மையில் கொரோனாவில் இருந்து உலகம் மிகப்பெரிய பேரழிவில் இருந்து இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சீனாவும் சரி, இந்தியாவும் சரி, அமெரிக்காவும் சரி யாருமே போரை நிச்சயம் விரும்பமாட்டார்கள். இப்போதைக்கு சீன படைகளை குவிப்பதன் அர்த்தம், இந்தியா எல்லையில் எதையும் செய்யக்கூடாது என்று அச்சுறுத்தவே அதேபோல் உலக நாடுகளுக்கும் தன் பலத்தை காட்டும் செயலாக சீனா இதை செய்கிறது. சீனா இதில் வேறு ஒன்றும் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. இந்த பதற்றம் விரைவிலேயே காணாமல் போக வாய்ப்பு உள்ளது.