உலகில் பசி, பட்டினியால் வாடுவோரில் கால்வாசி பேர் இந்தியாவில் உள்ளனர்
டெல்லி: உலகில் பசியுடன் வாடும் மக்களில் கால்வாசி பேர் இந்தியாவில் இருப்பதாக குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் (Global Hunger Index) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011-2013ம் ஆண்டில் உலகில் 842 மில்லியன் பேர் பசியால் வாடுகிறார்கள் என்று குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் (Global Hunger Index) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2010-2012ம் ஆண்டுடன்(870 மில்லியன்) ஒப்பிடுகையில் சற்று குறைவு தான்.
120 நாடுகளில் உள்ள மக்களை கணக்கில் கொண்டு அதில் எத்தனை பேர் பசியால் வாடுகிறார்கள் என்பது கணக்கிடப்பட்டுள்ளது.

2006ல் இருந்தே
கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே ஊட்டச்சத்து குறைவாக உள்ள மக்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது.

எப்படி கணக்கிடுகிறார்கள்?
ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள மக்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை மிகவும் குறைவாக உள்ளவர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இறந்தவர்களின் விகிதம் ஆகியவற்றைக் கொண்டே பசியால் வாடுவோரின் எண்ணிக்கை கணிக்கிடப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து
இந்தியாவில் சத்தான உணவை உட்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

விகிதம்
இந்தியாவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையாக உள்ளவர்களின் விகிதம் 21 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதமாக குறைந்துள்ளது. உடல் எடை மிகவும் குறைவான குழந்தைகளின் விகிதமும் 43.5 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறக்கும் விகிதமும் 7.5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் 2003-2007 மற்றும் 2008-2012ம் ஆண்டுகளில் இந்தியாவில் பசியால் வாடியவர்களின் சதவீதம் 24ல் இருந்து 21 சதவீதமாக குறைந்திருக்கிறது.

பசி ஓவர் தான்
உலக நாடுகளில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை இந்தியா, எதியோபியா, சூடான், காங்கோ, சாட், நைஜர் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக உள்ளது.

கால்வாசி பேர்
உலகில் 842 மில்லியன் பேர் பசியால் வாடுகிறார்களாம். அதில் கால்வாசி அதாவது 210 மில்லியன் பேர் இந்தியாவில் தான் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை குறைந்தும் பசி ஏன்?
உலக சந்தையில் கடந்த ஆண்டு கோதுமையின் விலை 16 சதவீதமும், அரிசியின் விலை 23 சதவீதமும், சோளத்தின் விலை 35 சதவீதமும் குறைந்தது. தானியங்களின் உற்பத்தி அதிகரித்து, விலையும் குறைந்த நிலையிலும் பசியால் வாடுவோருக்கு மட்டும் உணவு கிடைக்கவில்லையே.











Click it and Unblock the Notifications