பில் கேட்ஸ் அறக்கட்டளையை கண்காணிக்கவில்லை: உள் துறை அமைச்சகம் விளக்கம்
டெல்லி: பில்கேட்ஸ் அறக்கட்டளையைக் கண்காணிக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சர்வதேச தொழிலதிபர் பில் கேட்ஸ். இந்தியாவில் பில் கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பில் கேட்ஸுக்கு சொந்தமான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்திய தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை வழங்கியது தொடர்பாக இந்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகக் கூறப்பட்டது.

ஆனால், இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.தட்வாலியா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ பில் கேட்ஸ் அறக்கட்டளையை உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. அவ்வாறான எந்த நடவடிக்கையையும் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை' என்றார்.
பில் கேட்ஸ் மற்றும் அவருடைய மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோரின் சமூக சேவையைப் பாராட்டும் வகையில் சமீபத்தில் இருவருக்கும் பத்ம பூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications