126 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் மத்திய அரசு!
டெல்லி: பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 126 ரஃபேல் போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்யலாம் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா விரும்பியது. 3 ஆண்டுகள் பேரம் பேசியும், விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இதில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார். அவர் அந்த நாட்டின் அதிபர் ஹாலண்டேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர் பிரான்சிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்களை பறக்கும் நிலையில் வாங்குவதாக உறுதி அளித்தார்.
இனி இந்தியா- பிரான்ஸ் அரசுகள் நேரடி பேச்சு நடத்தி 4 பில்லியன் டாலர் மதிப்பிலான 36 ரஃபேல் விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுகையில், புதிதாக 36 ரஃபேல் ஜெட் போர் விமானங்கள் பிரான்சிடமிருந்து வாங்கப்பட இருப்பதால் 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம்; ரஃபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான எல்லா விஷயங்களும் பிரான்ஸ் அரசாங்கத்துடன் நேரடியாக பேசி தீர்த்து கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
இதன் மூலம் இனி ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தாது. நேரடியாக பிரான்ஸ் அரசுடனேயே மத்திய அரசு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications