சிட்னி, பாக். போல் இந்தியாவில் தீவிரவாதிகளால் சுலபமாக தாக்குதல் நடத்த முடியாது: பாரிக்கர்
டெல்லி: சிட்னி மற்றும் பாகிஸ்தானில் நடந்தது போல், இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களை தீவிரவாதிகளால் சுலபமாக கைப்பற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று முன்தினம் ஹோட்டல் ஒன்றில் புகுந்த தீவிரவாதி, அங்கிருந்த 50 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து தாக்குதல் நடத்தியதில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இத்தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியில் இருந்து உலகம் மீள்வதற்குள் நேற்று பாகிஸ்தான் பள்ளி ஒன்றில் நுழைந்த 6 தாலிபன் தீவிரவாதிகள், அங்கிருந்த மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில், 132 மாணவர்கள் உட்பட 141 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இத்தொடர் தாக்குதல்கள் எதிரொலியால் இந்தியாவில் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்.
அப்போது அவர் கூறுகையில், ‘எதிரிகளின் குழந்தைகள் கூட, பாகிஸ்தான் பள்ளியில் ஏற்பட்டது போன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொள்ளக் கூடாது. பாகிஸ்தான் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
மேலு, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தானில் நடந்ததுபோல, சிட்னியில் நடந்தது போல இந்தியாவில் சுலபமாக தீவிரவாதிகளால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியாது என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications