சர்தார் வல்லபாய் படேல் 140ஆவது பிறந்தநாள்: பிரதமர் மரியாதை - டெல்லியில் ஒற்றுமை ஓட்டம்
டெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கம் மிகவும் அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி டெல்லியில் இன்று ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடக்கி வைத்து பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 140ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். டெல்லி நாடாளுமன்ற வீதியில் வல்லபாய் படேலின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், டெல்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் சர்தார் வல்லபாய் படேலின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஒற்றுமை ஓட்டம்
வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி டெல்லியில் இன்று காலை 8.15 மணியளவில் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்' (Run for Unity) என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.டெல்லி துணைநிலை ஆளுநர் நஜுப் ஜங் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒற்றுமை ஓட்ட தொடக்க விழாவில் பங்கேற்றார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய பலம். பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்ததன்மூலம், வல்லபாய் படேல் ஒற்றுமையை வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். வளர்ச்சிக்கான புதிய உச்சங்களை இந்தியா அடைவதற்கு, ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவையே முக்கிய அம்சங்கள் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தாத்ரி சம்பவம், மாட்டிறைச்சி விவகாரம் போன்ற சில சம்பவங்களால் நாட்டில் சகிப்புத்தன்மை இன்மை அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டி எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளித்து வரும் நிலையில், பிரதமர் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் பரம்பரை அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, பரம்பரை அரசியல்தான் நமது அரசியல் அழிவுக்கு காரணம் என்று கூறிய அவர், சர்தார் படேல் தனது குடும்ப உறுப்பினர்களை ஒரு போதும் அரசியலில் ஈடுபடுத்தியதில்லை" என்றார் மோடி.












Click it and Unblock the Notifications