இந்திய மீனவர் சுட்டுக் கொலை: பாக். தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்
டெல்லி: குஜராத் கடலில் சர்வதேச எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர் பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநில மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடலில் சர்வதேச எல்லைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர் குஜராத் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் நரன்பாய் சோசா(30) என்பவர் பலியானார். இதையடுத்து பாகிஸ்தான் கடற்படையினர் 30 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றனர்.
மறுநாள் இந்தியா திரும்பிய மீனவர்கள் சோசாவின் உடலையும் கொண்டு வந்தனர். தாங்கள் இந்திய கடல் பகுதியில் தான் மீன் பிடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார். இந்திய மீனவர் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு அவரிடம் கடும் கண்டனம் தெரிவித்தது.
ஆனால் அவரோ யாரும் கொல்லப்படவில்லை என்றும், இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைந்ததால் தான் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications