அடடே.. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாமிடம்!
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாமிடம் வகிக்கிறது என ஐநா சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் அறிவித்துள்ளது.
டெல்லி: உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மூன்றாம் இடத்தை இந்தியா பெற்றுள்ளது என ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் அறிக்கையில் கூறியுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி உண்பவர்களும் மாடுகளை விற்பனை செய்பவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுவது தொடருகிறது. குஜராத்தில் உள்ள உனாவில் தொடங்கிய இந்த தாக்குதல் உலக அளவில் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றாலும் கூட இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
அதுவும் மாடுகளை இறைச்சிக்காக விற்கவோ வாங்கவோ கூடாது என பசுவதை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போது, பசு பாதுகாவலர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் மாட்டிறைச்சி உண்பவர்களை தாக்கினர். சென்னை ஐஐடியில் கூட இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய ஆராய்ச்சி மாணவர் சுராஜ் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இப்படி தாக்குதல்கள் நடந்துகொண்டு இருந்த காலகட்டத்தில்தான் இந்தியா மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. அதாவது 2016ஆம் ஆண்டில் மட்டும் 1.56 மில்லியன் டன் மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதன்மூலம், ஏற்றுமதியில் பிரேசில், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதுமட்டுமில்லாது, 2026 வரை 1.93 மில்லியன் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது என ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.