பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இந்திய ராணுவ திட்டங்களை கடத்திய மூத்த ராணுவ அதிகாரி: திடுக் தகவல்கள்
டெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய ராணுவ திட்டங்களை மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு நடைபெற்ற போது, கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவ திட்டங்கள் குறித்தான தகவல்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு கசிந்துள்ளது என்று ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி மற்றும் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே. பிக்ராம் சிங் இடையே செயல்திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதுதொடர்பான தகவல்களே கசிந்துள்ளது என தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக பேசியுள்ளனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் ரூம் நம்பர் 104 நாளில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அந்தோணி மற்றும் வி.கே. சிங் இடையில் 11 மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தை தகவல்கள் ஐ.எஸ்.ஐ.க்கு தெரியும். இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
இக் கூட்டம் முடிந்ததும் ராணுவ தளபதி 12 மணியளவில் ராணுவ நடவடிக்கைக்கான டைரக்டர் ஜெனரல் (DGMO) தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியாவிடம் கூட்டத்தில் பேசியது தொடர்பாக பேசியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட மணி நேரத்தில் பாகிஸ்தான் தனது படையினை குவிக்க தொடங்கிவிட்டது.
இந்தியாவின் திட்டத்திற்கு எதிராக பாகிஸ்தான் படையை குவிக்க தொடங்கியதையடுத்து ராணுவ உளவுத்துறை உஷார் ஆனது. இதுதொடர்பாக ராணுவ தளபதி வி.கே. சிங், அந்தோனியிடம் பேசியுள்ளார். இதனையடுத்து பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் இப்பிரச்சனை எடுத்து செல்லப்பட்டுள்ளது.
பிரதமராக இருந்த மன்மோகன் சிங் உடனடியாக ராணுவ நடவடிக்கைக்கான டைரக்டர் ஜெனரல் போர் அறைக்கு சென்றார். உடனடியாக மூத்த ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து ராணுவம் குறிப்பிட்ட நபரை அடையாளம் கண்டது. அவர் மூத்த ராணுவ அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டார்.
ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களை ஐ.எஸ்.ஐ.க்கு கசியவிட்டதில் முக்கியமானவராக இருந்தார் என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து நாடாளுமன்றத்தின் தெற்கு பிளாக்கில் உள்ள அனைத்து அமைச்சகத்திலும் சி.சி.டி.வி. கேமராவை பொறுத்த அரசு முடிவு செய்தது.












Click it and Unblock the Notifications