இந்த ஸ்பெஷல் 'அம்மா'வுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்த இந்திய ராணுவத்தின் ருத்ரதாண்டவம்
டெல்லி: இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்கியது கார்கில் போரில் வீரமரணம் அடைந்த 22 வயது கேப்டன் விஜயந்த் தாப்பாரின் தாயின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளதாக ஓய்வு பெற்ற கர்னல் விஜேந்திர தாப்பார் தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஓய்வு பெற்ற கர்னல் விஜேந்திர தாப்பார் கூறுகையில்,
எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள். இன்று என் மனைவியின் பிறந்தநாள். அவருக்கு இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷனை விட சிறந்த பிறந்தநாள் பரிசு கிடைக்காது.
இந்திய ராணுவத்தை நினைத்து மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இந்தியா எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் கூறுவது கண்டிக்கத்தக்கது. இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பாகிஸ்தான் அதற்கான விலையை அளிக்க வேண்டி இருக்கும் என்றார்.
விஜேந்திர தாப்பாரின் மகன் கேப்டன் விஜயந்த் தாப்பார்(22) கார்கில் போரின் போது ராஜ்புடானா ரைபிள்ஸ் ரெஜிமென்ட்டை தலைமை தாங்கிச் சென்று 1999ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications