தாய்லாந்து குகையில் சிறுவர்களை மீட்டதில் இந்தியாவின் பங்களிப்பும் இருக்கு பாஸ்.. அசத்திய நிறுவனம்!
புனே: தாய்லாந்தில் குகையில் சிக்கி கஷ்டப்பட்டு 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் மீட்பதற்கு பல்வேறு உலக நாடுகள் உதவி செய்திருந்தன.
இந்தியாவின் புனே நகரில் உள்ள ஒரு நிறுவனமும் இதில் தொழில்நுட்ப ரீதியாக சில உதவிகளை செய்துள்ளதாக தகவல் தற்போது வெளியே வந்துள்ளது.
தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, புனேயை தலைமையிடமாக கொண்ட Kirloskar Brothers' Limited' என்ற நிறுவனம் தண்ணீரை அகற்றுவதில் உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தக்கூடியது என்றும், இந்த நிறுவனத்தின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறும் இந்திய தூதரக அதிகாரிகள், தாய்லாந்து அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தனர்.
இதன் பேரில் இந்தியா, தாய்லாந்து, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்த இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவினர், சிறுவர்கள் சிக்கிக் கொண்டிருந்த குகை பகுதிக்கு விரைந்தனர் ஜூலை 5ஆம் தேதி முதல் சிறுவர்கள் மீட்கப்படும் வரை இந்த நிபுணர்கள் குகையின் அருகிலேயே இருந்து மீட்பு பணிகளை நடத்தி வந்தனர்.
தண்ணீர் அகற்றும் பணிக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் இந்த குழு வழங்கி வந்தது. இந்த நிறுவனம் சார்பில் 4 அதிநவீனமான நீர் அகற்றும் இயந்திரங்கள் வழங்கியிருந்தது. மகாராஷ்டிராவில் இருந்து இந்த இயந்திரங்கள் விமானத்தின் மூலமாக தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
18 நாட்களுக்கு பிறகு நேற்று அனைத்து சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இங்கிலாந்தின் ஆழ்கடல் நீச்சல் நிபுணர்கள், அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி போன்ற உலகின் பல்வேறு நாடுகளின் உதவியுடன் இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பங்களிப்பு இருப்பது மகிழ்ச்சியே.