இந்திய பெண் தூதர் கைதுக்கு எதிர்ப்பு.. அமெரிக்க எம்.பிக்களைச் சந்திக்க ராகுல், மோடி மறுப்பு
டெல்லி: இந்தியத் துணைத் தூதர் தேவ்யானியை அமெரிக்கப் போலீஸார் அடாவடியாக கைது செய்து, கைவிலங்கிட்டும், ஆடைகளைக் களைந்தும் சோதனை செய்த செயலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று நடப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் ரத்து செய்து விட்டனர்.
ஆனால் இந்தக் காரணத்திற்காகத்தான் ரத்து என்று ராகுல் காந்தியும், ஷிண்டேயும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக, நாடாளுமன்றப் பணிகளில் பிசியாக இருந்ததால் இவர்கள் சந்திக்கவில்லை என்று அவர்களது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், துணைத் தூதருக்கு ஏற்பட்ட அவமானத்தால்தான் தான் அமெரிக்க குழுவை சந்திக்கவில்லை என்று வெளிப்படையாக மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், நமது நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதி்ப்பளித்தும், அவர்களுக்குத் துணையாகவும், நமது தூதருக்கு அமெரிக்காவில் நடந்த அவமரியாதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த சந்திப்பை நான் நிராகரித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இதே குழுவை, இதே காரணத்திற்காக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் சந்திக்க மறுத்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
அமெரிக்காவிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஸ்க்வீகெர்ட், ராபர்ட் உடால், மெடலின் போர்டெல்லா ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு டெல்லி வந்துள்ளது. இந்தக் குழுவைச் சந்திக்கத்தான் இந்தியத் தலைவர்கள் மறுத்துள்ளனர்.
ஐடி கார்டுகளை ஒப்படைக்க இந்தியா உத்தரவு
இதற்கிடையே, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தனது அரசு வழங்கிய அடையாள அட்டைகளை திருப்பி அளிக்குமாறு இந்திய அரசு, அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications