ஆப்பிரிக்க சிறையில் இருந்து இந்திய கப்பல் கேப்டன் சுனில் விடுதலை: குடும்பத்தார் மகிழ்ச்சி
டெல்லி: ஆப்பிரிக்க நாட்டு சிறையில் 6 மாதங்களாக இருந்த இந்திய கப்பல் கேப்டன் சுனில் ஜேம்ஸ் விடுதலை செய்யப்பட்டார்.
இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டனாக இருப்பவர் மும்பையைச் சேர்ந்த சுனில் ஜேம்ஸ் (38). அவரது மனைவி அதிதி. சுனில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே உள்ள லாகோஸில் கப்பலில் சென்று கொண்டிருக்கையில் அதை கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.
இதையடுத்து ஜூலை 30ம் தேதி இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் தலைநகர் லோமில் கப்பலை நிறுத்திவிட்டு வந்த சுனில் அந்நாட்டு கடலோரக் காவல்படையால் கைது செய்யப்பட்டார். கடற்கொள்ளையர்களுக்கு உதவியதாக சுனில் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருடன் விஜயன் என்ற மாலுமியும் கைது செய்யப்பட்டார்.

மன்மோகன் சிங்
குற்றம் செய்யாத சுனில் ஜேம்ஸை டோகோ நாட்டு சிறையில் இருந்து மீட்குமாறு அவரது குடும்பத்தார் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

குழந்தை இறப்பு
சுனில் சிறையில் வாடுவதை நினைத்து வருந்திய அதிதிக்கு மேலும் ஒரு சோகம் ஏற்பட்டது. அவர்களின் ஒரே பிள்ளையான 11 மாத ஆண் குழந்தை உடல் நலக்குறைவால் கடந்த 2ம் தேதி மரணம் அடைந்தது.

பிண அறை
தனது பிள்ளைக்கு இறுதிச் சடங்குகளை செய்ய தனது கணவர் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் அதிதி குழந்தையின் உடலை மருத்துவமனையில் உள்ள பிண அறையில் பாதுகாத்து வைத்தார்.

சுனில் விடுதலை
6 மாதங்களாக சிறையில் வாடிய கேப்டன் சுனில் மற்றும் விஜயன் என்ற மாலுமி மத்திய அரசின் தலையீட்டால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று டோகோவில் இருந்து இந்தியாவுக்கு கிளம்புகிறார்கள்.

பிரதமருக்கு நன்றி
சுனிலை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவரது குடும்பத்தார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications