மோடி குறித்து பேஸ்புக்கில் கீழ்த்தரமான கார்ட்டூன் வெளியீடு - பூடானில் இந்திய ஆசிரியை டிஸ்மிஸ்!
தோகா: பூடானில் பிரதமர் மோடி பற்றி கீழ்தரமாக கேலி சித்திரம் வரைந்து பேஸ்புக்கில் வெளியிட்ட இந்திய ஆசிரியையை, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூடானில் உள்ள தோகாவில் உள்ள இந்திய பள்ளியில், இந்தியாவை சேர்ந்த ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கீழ்தரமாக கேலி சித்திரம் ஒன்றை வரைந்ததாகக் கூறப்படுகிறது. அதனை, அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டார். இதனால், அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

புகார் தொடர்பாக அந்த ஆசிரியையிடம் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், 3 நாட்கள் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்.
ஆனால், தொடர்ந்து அவர் மீது புகார்கள் வந்ததாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியரை அழைத்த பள்ளி நிர்வாகம் அவரைத் தானாகவே தனது வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆசிரியையும் பள்ளி நிர்வாகத்தின் வற்புறுத்தலுக்கு பயந்து பணியை ராஜினாமா செய்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு ஆசிரியையின் நண்பர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு. அந்நாட்டு குடிமக்கள் தங்களது கருத்து சுதந்திரத்தை வெளியிட உரிமை உள்ளது' என்றனர்.
ஆனால், இது தொடர்பாக பள்ளியின் நிர்வாக தரப்பு அளித்த விளக்கத்தில், ‘மோடி பற்றிய கேலி சித்திரத்துடன் பள்ளியின் சின்னம் மற்றும் பெயரையும் அந்த ஆசிரியைக் குறிப்பிட்டிருந்தார். அதனால் பள்ளியின் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பூடானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நிறைய புகார்கள் வந்ததாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications