கல்வியை மனித நலனுக்கான கருவியாகக் கருதுவதே இந்திய பாரம்பரியம்.. பீகார் நாளந்தா பல்கலை.யில் மோடி!
ராஜ்கிரி: பீகார் மாநிலத்தில் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் புதிய வளாகத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். முன்னதாக நாளந்தா பல்கலைக் கழகத்தின் பழங்கால இடிபாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று எச்சங்களாக திகழும் பண்டைக்கால இடிபாடுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அசல் நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் முதல் குடியிருப்பு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நாளந்தாவின் இடிபாடுகள் 2016-ம் ஆண்டில் ஐ.நா பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இதனைப் பார்வையிட்ட பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில், நாளந்தாவின் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட எச்சங்களைப் பார்வையிட்டது அற்புதமாக இருந்தது. பண்டைய உலகின் மிகப் பெரிய கல்வி நிறுவனமாக திகழ்ந்ததற்கு சான்றாக இது உள்ளது. இந்தத் தளம் ஒரு காலத்தில் இங்கு செழித்து வளர்ந்த அறிவார்ந்த கடந்த காலத்தைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறது. நாளந்தா ஒரு அறிவார்ந்த உணர்வை உருவாக்கியுள்ளது. அது நம் நாட்டில் தொடர்ந்து செழித்து வளர்கிறது. எனப் பதிவிட்டுள்ளார்.

பின்னர் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக் கழகப் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் தாம் நாளந்தாவுக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு தற்போது சாதகமான அம்சங்கள் நிலவுவதாக அவர் கூறினார். நாளந்தா என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. இது ஒரு அடையாளம், மரியாதை, அறிவின் வேர், தாரக மந்திரம் என்று அவர் தெரிவித்தார். புத்தகங்கள் நெருப்பில் கருகினாலும் அறிவை அழிக்க முடியாது என்ற உண்மையை பறைசாற்றுவதே நாளந்தா பல்கலைக்கழகம் என்று பிரதமர் தெரிவித்தார். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இந்தியாவின் பொற்காலம் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறி என்று அவர் எடுத்துரைத்தார்.

நாளந்தாவுக்குப் புத்துயிரூட்டுவது, இந்தியாவின் திறன்களை உலகிற்கு எடுத்துக் காட்டும் என்று அவர் குறிப்பிட்டார். வலுவான மனித மாண்புகளைக் கொண்ட நாடுகள், வரலாற்றுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சிறந்த உலகை உருவாக்கும் திறன் கொண்டவையாக உள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

நாளந்தா பல்ககலைக்கழகம், பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியத்தை சுமந்து நிற்பதாக அவர் குறிப்பிட்டார். இப்பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சி இந்திய கலாச்சாரத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்லாமல் அறிவு உலகின் மறுமலர்ச்சி என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். நாளந்தா பல்கலைக்கழக வளாக திட்டத்தில் நட்பு நாடுகளின் பங்களிப்பை பாராட்டிய அவர், இன்றைய தொடக்க விழாவில் பல நாடுகள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். நாளந்தா பல்கலைக்கழக மேம்பாட்டில் பீகார் மக்களின் உறுதிப்பாட்டை பிரதமர் பாராட்டினார்.

ஒரு காலத்தில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், நாளந்தா என்றால் அறிவு மற்றும் கல்வியின் தொடர்ச்சி என்று பொருள்படும் எனக் கூறினார். கல்வி குறித்த இந்தியாவின் அணுகுமுறையும், சிந்தனையும் இதுவே என்றும் அவர் தெரிவித்தார். கல்வி என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. என்பதுடன் உயரிய மதிப்புகளையும், சிந்தனைகளையும் அது கற்பிக்கிறது என்று பிரதமர் கூறினார். பழங்காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் தேசங்களைப் பொருட்படுத்தாமல் அனுமதிக்கப்பட்டனர் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். புதிதாக திறக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் அதே பண்டைய பாரம்பரியத்தை நவீன வடிவில் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், 'உலகம் ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார்.












Click it and Unblock the Notifications