இந்தியாவின் டார்கெட் "Haji Pir pass" 60 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானை கதறவிட்டு மண்டிபோட வைத்த இடம்!
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள Haji Pir pass பகுதியைத்தான் இந்தியா தற்போதைய சூழ்நிலையில் தாக்கி கைப்பற்றக் கூடும் என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னர் Haji Pir pass பகுதியை இந்தியா கைப்பற்றி பின்னர் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தால் பாகிஸ்தானிடமே கொடுத்த இடம்தான் என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான யுத்தத்தில் அதிகம் பேசப்பட்ட இடங்களில் ஒன்றுதான் Haji Pir pass - ஹாஜி பீர் கணவாய். ஜம்மு காஷ்மீரின் பீர் பாஞ்சல் மலைத் தொடரில் உள்ளது ஹாஜி பீர் கணவாய். ஜம்மு பிராந்தியத்தை ஶ்ரீநகரில் இருந்து பிரிக்கக் கூடிய பகுதி. ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீரில் பிரதான வர்த்தக சாலையாக இருந்தது இந்த ஹாஜி பீர் கணவாய்.

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்த போது ஹாஜி பீர் கணவாயும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த கணவாய் பகுதி வழியாகவே பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்தது பாகிஸ்தான்.இதனால் இது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் மாறியது.
1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்போது மேஜர் ரஞ்சித் சிங் தயாள் தலைமையிலான இந்திய படையணி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவி ஹாஜி பீர் கணவாயை சூழ்ந்திருந்த மலை சிகரங்களை அடுத்தடுத்து வெற்றிகரமாக கைப்பற்றியது. இதனால் ஹாஜி பீர் கணவாயும் இந்திய ராணுவத்திடம் வீழ்ந்தது. ஹாஜி பீர் கணவாயை இந்தியா கைப்பற்றிவிட்டதால் ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு காஷ்மீரின் இதர நிலப் பகுதியும் எந்த நேரத்திலும் இந்தியா வசமாகிவிடும் சூழ்நிலை வந்துவிட்டது.
அந்த தருணத்தில்தான் சோவியத் ரஷ்யாவின் தலையீட்டில் தாஷ்கண்ட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா வெற்றிகரமாக கைப்பற்றிய ஹாஜி பீர் கணவாய் பகுதி மீண்டும் பாகிஸ்தான் வசமே ஒப்படைக்கப்பட்டது. அன்று மட்டும் இந்த கணவாய் ஒப்படைக்காமல் போயிருந்தால் ஜம்மு காஷ்மீரின் விதியும் மாறியிருக்கலாம் என்பதுதான் பாதுகாப்பு தரப்பினரின் கருத்து.
தற்போது, ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நிலப் பகுதிகளை இந்திய ராணுவம் மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கும் என கூறப்படுகிறது. அப்படியான ஒரு யுத்த நடவடிக்கையில் இந்தியா இறங்கும் போது அதன் முக்கிய இலக்காக மீண்டும் ஹாஜி பீர் கணவாய்தான் இருக்கும்; இந்த கணவாயை இம்முறை மீண்டும் இந்தியா கைப்பற்றிவிட்டாலேயே பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் நிலப் பகுதிகளை மறந்துவிட வேண்டியதுதான் என்கின்றனர் பாதுகாப்பு தரப்பு வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications