துண்டு பேப்பரில் வெடிகுண்டு மிரட்டல்.. பதறிய பயணிகள்! இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசர தரையிறக்கம்
அகமதாபாத்: குவைத்தில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம் குஜராத் அகமதாபாத்தில் அவசர தரையிறக்கபட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
இண்டிகோ விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது. இண்டிகோ விமானத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

இன்று காலை 6.40 மணியளவில் 180 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஒன்று குவைத்தில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த சூழலில், விமானத்தின் உள்ளே கிடந்த ஒரு பேப்பரில் இந்த விமானத்தைக் கடத்தப்போவதாகவும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது.
இதனைக் கவனித்து பதறிப்போன விமானிகள், உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை எச்சரித்தனர். இதையடுத்து, விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தை அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கினர்.
பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அவர்களது உடமைகள் முழுமையாக சோதனையிடப்பட்டன. விமானம் முழுவதும் சல்லடை போட்டு சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் சந்தேகத்திற்கிடமாக எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதேபோல, கடந்த ஜனவரி 22 ஆம் தேதி டெல்லியில் இருந்து புனே வந்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications