இந்திராணி முகர்ஜியின் உடல்நலம் கவலைக்கிடமானதற்கு என்ன தான் காரணம்?
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிடவில்லை என்று தற்போது கூறப்படுகிறது.
ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிடிருக்கக்கூடும் என்று மருத்துவமனையின் டீன் டி.பி. லஹானே தெரிவித்திருந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த இந்திராணி தற்போது நலமாக உள்ளார். அவர் நாளை சிறை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து
இந்திராணி மன அழுத்தத்திற்கான மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் அவர் சுயநினைவை இழந்ததாக முதலில் லஹானே தெரிவித்தார்.
இந்திராணி
முதலில் செய்யப்பட்ட பரிசோதனையில் இந்திராணியின் சிறுநீரில் மன அழுத்தத்திற்கான மருந்தான பென்சோடியசிபைனின் அளவு 2088 அளவுக்கு இருந்தது. வழக்கமாக அந்த மருந்தை உட்கொள்பவர்களின் சிறுநீரில் அது 200 அளவுக்கு தான் இருக்கும். எனவே இந்திராணி அந்த மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் சுயநினைவை இழந்தார் என்றார் லஹானே.
இல்லையே
இந்திராணியின் ரத்தம் மற்றும் சிறுநீரில் எந்த மருந்தும் அதிக அளவில் உட்கொண்டதற்கான தடயம் இல்லை என்று மாநில தடயவியல் ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திராணிக்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டது.
அது வேற இது வேற
முதலில் இந்திராணி அளவுக்கு அதிகமாக மாத்திரிகைள் உட்கொண்டார் என்று லஹானே தெரிவித்தார். பின்னர் பரிசோதனையில் இந்திராணி எந்த மருந்தையும் அதிக அளவில் எடுக்கவில்லை என்று வந்ததையும் லஹானே ஆதரித்துள்ளார். வேறு வேறு பரிசோதனைகள் செய்துள்ளதால் வெவ்வேறு முடிவுகள் கிடைத்துள்ளன என்றார்.
என்ன காரணம்?
இந்திராணி எந்த மருந்தையும் அதிக அளவில் உட்கொள்ளவில்லை என்றால் அவரது உடல்நலம் திடீர் என கவலைக்கிடமானதற்கு என்ன காரணம் என்பது மட்டும் இன்னும் குழப்பமாகவே உள்ளது.