சிறைகளில் சிசிடிவி கட்டாயம், லாக்-அப்புகளில் பொருத்த பரிசீலிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
டெல்லி: சிறைச்சாலைகளில் மனித உரிமை மீறப்படாமல் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து சிறைகளிலும் ஓராண்டு காலத்திற்குள், சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. போலீஸ் லாக்-அப்புகளிலும் சிசிடிவிகளை பொருத்துவது பற்றி பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.
சிறைத்துறை சீரமைப்பு குறித்தும், மனித உரிமைகள் ஆணையத்தை மாநில அரசுகள் முடக்குவது குறித்தும் திலிப் கே.பாசு என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவை நீதிபதிகள் டி.எஸ்.தாகூர் மற்றும் ஆர்.பானுமதி பெஞ்ச் விசாரித்து வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் கூறியுள்ளதாவது: காவல் நிலையங்களில் குறைந்தது இரு பெண் போலீசாராவது பணியில் இருக்க வேண்டும். நாடுமுழுவதிலுமுள்ள மத்திய மாநில சிறைச்சாலைகளில் ஓராண்டுக்குள் சிசிடிவியை கட்டாயம் பொருத்த வேண்டும். அதிகபட்சம் இரு வருடங்களுக்குள்ளாக கேமராக்களை நிறுவ வேண்டும். இதன் மூலம் மனித உரிமை மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும்.
மேலும், போலீஸ் ஸ்டேஷன் லாக்-அப்புகளையும் சிசிடிவி கொண்டு கண்காணிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். டெல்லி, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மனித உரிமை ஆணையத்திற்கு நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.