சீக்கியர் வேடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி பஞ்சாப்பில் பயங்கர வன்முறைகளை தூண்ட பாக். சதி- திடுக் தகவல்
சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர் போல தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து பயங்கர வன்முறைகளை கட்டவிழ்த்துவிட பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பஞ்சாப் மாநில அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் புனித நூல் திருடப்பட்டு பின்னர் கிழித்தெறியப்பட்டு நடுவீதியில் வீசப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்களது புனித நூலை அவமதித்தவர்களை கைது செய்யக் கோரி சீக்கியர்கள் தொடர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மிகப் பெரிய வன்முறையாக வெடித்துள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் மத்திய அரசின் உளவுத்துறை சார்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ஐ.எஸ்.ஐ. அமைப்பு, சீக்கியர்களின் நடை, உடை, பாவனைகளை கற்றறிந்துள்ள பயங்கரவாதிகளை சீக்கியர் வேடத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஊடுருவ செய்திருப்பதாகவும், இவர்களை கொண்டு, மாநிலத்தில் மிகப் பயங்கர வன்முறையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாசவேலைக்காக 15 லிருந்து 20 வரையிலான பயங்கரவாதிகளுக்கு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமையன்று ஃபாரித் கோட் பகுதியில் இப்படி ஊடுருவிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்களுக்கு துபாய் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து இவர்களுக்கு நிதி உதவி கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.