உண்மையை மறைத்து பெங்களூரை அழகாக காட்டி முதலீட்டாளர் மாநாடு நடத்தும் கர்நாடகா
பெங்களூர்: பெங்களூரில் நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக பிச்சை எடுப்பவர்கள், நாய்கள் தெருக்களில் சுற்றாமல் போலீசார் பார்த்துக் கொள்கின்றனர்.
பெங்களூரில் உள்ள பேலஸ் கிரவுண்டில் முதலீட்டாளர் மாநாடு புதன்கிழமை துவங்கியது. மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி துவங்கி வைத்தார். துவக்க விழாவில் கர்நாடக முதல்வர் சித்தாரமையா, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாடு நாளை வரை நடைபெறுகிறது.
மாநாட்டில் பல்வேறு நாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொள்வதால் பெங்களூர் அழகாக இருக்க பிச்சைக்காரர்களை நகரின் முக்கிய சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர் போலீசார். பெரும்பாலான டிராபிக் சிக்னல்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
போலீசார் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக மூன்றாம் பாலினத்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாநாடு நடக்கும் பகுதி மற்றும் முக்கிய சாலைகளில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் ஆட்கள் வைத்து பிடிக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடக்கும் பேலஸ் கிரவுண்டில் 150க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருந்தன. தற்போது ஒரு நாயைக் கூட காண முடியவில்லை. மாநாடு மூலம் ரூ.2.50 லட்சம் கோடிக்கு முதலீடு கிடைக்கும் என்று சித்தராமையா எதிர்பார்க்கிறார்.
முதலீடு கிடைக்கிறதோ இல்லையோ மாநாடு முடிந்ததும் பெங்களூர் தெருக்களில் மீண்டும் நாய்கள் கூட்டத்தை பார்க்கலாம். பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதையும் பார்க்கலாம்.