ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஜூன் 6-ம் தேதி ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. ஆனால் கார்த்தி சிதம்பரம் ஆஜாராமல் இருந்தார். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அளித்துள்ளது. ஜூன் 6-ம் தேதி நடக்கும் வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூலை 3ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி ஹைகோர்ட் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.