கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுமா? அரசியல், மீடியாவின் பலி ஆடான ஐபிஎல்!
மும்பை: மாநில மக்களின் உணர்ச்சிகளோடு சூதாட்டம் நடத்தி, தனது தலைக்கு வந்த கத்தியை லாவகமாக திருப்பிவிட்டுள்ளார் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இதற்காக ஐபிஎல் கிரிக்கெட் பலி கடாவாக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9வது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. மகாராஷ்டிராவில் கடுமையான வறட்சி நிலவும் சூழ்நிலையில், அம்மாநில அணிகளான மும்பை இந்தின்ஸ், புனே ரைசிங் ஜெயன்ட்ஸ் அணிகள் தலா 10 போட்டிகளை தங்கள் சொந்த கிரவுண்டுகளில் ஆட வேண்டியிருந்தது.
இதனிடையே மைதான பராமரிப்புக்கு 60 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதால், வறட்சி பாதித்துள்ள இந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளை மராட்டிய மாநிலத்தில் நடத்தக்கூடாது என்று ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

போட்டி மாற்றம்
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் 30ம் தேதிக்கு பிறகு எந்த போட்டியும் மராட்டிய மண்ணில் நடைபெற கூடாது என உத்தரவிட்டது. இதையடுத்து மும்பையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இறுதி போட்டியை ஐபிஎல் நிர்வாகம் பெங்களூருக்கு மாற்றியுள்ளது.

ஹோம் கிரவுண்ட்
மும்பை தனது மைதானமாக ஜெய்ப்பூரையும், புனே தனது ஹோம்-கிரவுண்டாக விசாகபட்டிணத்தையும் தேர்வு செய்துள்ளன. இதனால் மகாராஷ்டிர ரசிகர்கள் கிரிக்கெட்டை நேரில் பார்க்க முடியாது.

பட்னாவிஸ் அரசியல்
ஆனால், வறட்சி பாதிப்பு குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க, ஐபிஎல் கிரிக்கெட்டை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பலிகடாவாக்கிவிட்டார் என்பதுதான் உண்மை.

அரசு மீது கோபம்
பொதுவாக எந்த ஒரு மாநிலத்திலுமே வறட்சி தலை விரித்து ஆடும்போது, குடிநீருக்கு மக்கள் அல்லாடும்போது, விவசாயிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்யும்போது, அம்மாநில அரசு மீதுதான் மக்களின் கோபம் திரும்புவது வழக்கம்.

தமிழகத்திலும்
இயற்கை பேரிடர் தாக்கும்போதெல்லாம் ஆளும் கட்சி மீது மக்கள் கோபம் கொண்டு, ஆட்சியை விட்டு அகற்றிய வரலாறு உலகமெங்கும் நடந்துள்ளது. கடந்த முறை, ஜெயலலிதா ஆட்சி காலத்தின் இறுதியில் கூட தமிழக மக்கள் இதை பார்த்துள்ளனர்.

தந்திரம்
மக்களின் கோபம் அரசு மீது திரும்புவதை தவிர்க்க பட்னாவிஸ் எடுத்த ஆயுதம்தான் ஐபிஎல் தவிர்ப்பு., ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக மைதானத்தில் தெளிக்கப்பட உள்ள தண்ணீர் குடிநீர் கிடையாது, கழிவு நீர்தான் என்று வாக்குறுதி அளித்தது ஐபிஎல் நிர்வாகம். அசையவில்லை பட்னாவிஸ்.

குடிநீருக்கும் தயார்
மைதானத்தில் செலவிடப்படும் நீருக்கு மாற்றாக, வறட்சி பாதித்த பகுதி மக்களுக்கு இலவச குடிநீர் சப்ளை செய்ய தயார் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியபோதும், டோன்ட் கேர் என்றார் பட்னாவிஸ்.

தப்பிக்கும் வழி
வறட்சி பாதித்த அனைத்து பகுதிகளுக்கும், ஐபிஎல் நிர்வாகத்தால் குடிநீரை கொண்டு சேர்க்க முடியாது. இது கூடுதல் சர்ச்சைக்கு வழி வகுக்கும் என்பதுதான் பட்னாவிஸ் எண்ணம். ஆனால் மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளிப்பதாக கூறிக்கொண்டு, ஐபிஎல் கிரிக்கெட்டையே தடை செய்துவிட்டால், பழியில் இருந்து தப்பலாம் என்பது பட்னாவிஸ் திட்டம்.

தடாலடி பேட்டி
வழக்கு கோர்ட்டில் நடந்தபோதே, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மாநிலத்தை விட்டு வெளியே போனாலும் பரவாயில்லை, தண்ணீர் மட்டும் தரவே மாட்டேன் என்று அறிவித்துவிட்டார் பட்னாவிஸ். இதன்மூலம், தண்ணீர் பிரச்சினையை தீர்க்கிறோமோ இல்லையோ, மக்களின் சோகத்தில் தனக்கு அக்கறையுண்டு என்று காட்டிவிட்டால் போதும் என்ற மனநிலையில்தான் இருந்தார் அவர்.

வித்தைக்காரர்கள்
வறட்சிக்கும் ஐபிஎல்லுக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள தொடர்பு என்றாலும், இரண்டையும் இணைக்கும் வித்தை தெரிந்தவர்கள்தான் அரசியல்வாதிகள். அதைத்தான் செய்தார் பட்னாவிஸ்.

பழைய பஞ்சம்
1987ம் ஆண்டு நாடு முழுக்க பெரும் வறட்சி தலை விரித்து ஆடியது. மழை அளவு 19 சதவீதம் குறைந்தது. 60 சதவீத விவசாய நிலம் தண்ணீரின்றி தவித்தது. நினைவில் கொள்ளவும்.. இது மராட்டிய மாநிலத்திற்கு மட்டுமான வறட்சியல்ல, நாடு முழுமைக்குமான புள்ளி விவரம்.

உலக கோப்பை
இந்த சூழ்நிலையிலும், இந்தியா-பாகிஸ்தான் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தின. அப்போதைய ராஜிவ்காந்தி அரசுக்கு எதிராக மக்கள் எந்த முணுமுணுப்பையும் முன்வைக்கவில்லை. 1983 போல இப்போதும் இந்தியா வெற்றி பெறுமா என்ற பேச்சுதான் அப்போது இருந்தது.

தெளிவு இருந்தது
மழை பொய்த்து போனதற்கும், நீர் மேலாண்மையை ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதற்கும், கிரிக்கெட் எப்படி காரணமாக இருக்க முடியும் என்ற தெளிவு, அப்போது மக்களிடம் இருந்தது. இதற்கு காரணம், அந்த தெளிவை அப்போதைய ஊடகங்களும் உருவாக்கி வைத்திருந்தன.

சர்ச்சை தேவை
மக்களின் உணர்வுகளை தூண்டி காசு பார்க்கும் ஊடகங்கள் இப்போது பெருகியுள்ள சூழ்நிலையில், எந்த ஒரு சம்பவத்தையும் 'சர்ச்சைக்குறியதாக' சித்தரிக்கும் போக்கு கூடிவிட்டது. அதுபோன்ற தொலைக்காட்சி, ஊடகத்தின் கண் வழியே பார்க்கும் மக்களுக்கும், எல்லாமே சர்ச்சைக்குறியதாக தெரிகிறது.

நுனிப்புல் மேய்தல்
ஒருவகையில் இதுபோன்ற சென்சேஷனல் செய்திகள், ஒரு சம்பவத்தின் உண்மை தன்மையை குழி தோண்டி புதைத்துவிடுகின்றன. நிகழ்வுக்கான காரணத்தை ஆராய்வதை தவிர்த்துவிட்டு, மேலோட்டோமாக ஒரு உணர்வு நிலையை மட்டுமே மக்கள் வைத்துக்கொண்டு உணர்ச்சிவசப்படுவதற்கு, இதுபோன்ற நுனிப்புல் மேய்தல் ஊடகங்கள் காரணம்.

வறட்சி vs பசுமை
மகாராஷ்டிராவிலும் அதுதான் நடந்தது. மக்களை உணர்ச்சிவசப்பட்ட வைக்க வேண்டும் என்பதற்காக வறட்சி பாதித்த விவசாய நிலங்களையும், பசுமையான மைதான புல் தரைகளையும் மாற்றி மாற்றி காண்பித்தன டிவி மீடியாக்கள். இரண்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை யோசிக்க கூட மக்களை அவர்கள் அனுமதிக்கவில்லை.

பாரபட்சம்
இதே மீடியாக்கள், நட்சத்திர ஹோட்டல்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் நீச்சல் குளங்களில் நீர் நிரப்புவதை காண்பிக்கவில்லை. பணக்காரர்களும், நடிகர்களும், வீட்டு முற்றத்தில் வளர்த்துள்ள புல்வெளிகளையும் காட்டவில்லை. உண்மையில் இவற்றுக்கும் வறட்சிக்கும் எப்படி தொடர்பில்லையோ, அதேபோலத்தான் கிரிக்கெட் மைதானங்களுக்கும், வறட்சிக்கும் தொடர்பு கிடையாது.

நடிகர் சங்கம்
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலான நடிகர்கள் பணம் கொடுத்து உதவவில்லை என்பதற்காக சமூக வலைத்தளங்களில் பொங்கி, நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியை தவிர்த்தனர் பொதுமக்கள். இதுதான் உணர்வு நிலை.

உண்மை நிலை
ஆனால், மக்களுக்கு வேண்டியதை செய்து தர தேர்ந்தெடுக்கப்பட்டது நடிகர் சங்கம் கிடையாது.. நமக்கான அரசுதான் அதை செய்ய வேண்டும் என்பதுதான் உண்மை நிலை. உண்மை நிலையை, உணர்வு நிலை மழுங்கடிப்பது பேராபத்து.

பிரச்சினையை தீருங்கள்
சோஷியல் மீடியாவில் மக்கள் பொங்கினர், டிவி மீடியாக்கள் அலறின.. ஐபிஎல் கிரிக்கெட்டை 30ம் தேதிக்கு பிறகு, வேறு மாநிலத்திற்கு மாற்றியாகிவிட்டது. ஓ.கே. மே 1ம் தேதி முதல் மகாராஷ்டிவில், குடிக்க நீரும், விவசாயத்திற்கு தண்ணீரும் கிடைத்துவிடும் என பட்னாவிஸ் உறுதியளிக்க முடியுமா? அதை மக்கள்தான் வலியுறுத்தி கேட்பார்களா? நடக்க வாய்ப்பில்லை. இன்னொரு சென்சேஷனல் செய்தி அப்போது வெளியாகும். மக்கள் அதற்காக பொங்கிக்கொண்டிருப்பார்கள்!
-
5 முறை சாம்யின்னு கூட பார்க்கல.. சின்ன பையன் எல்லாம் பொளக்கறான் சார்! இணையத்தில் சுற்றும் CSK மீம்ஸ் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications