'ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் டோணிக்கும் தொடர்பு-பொய்யான வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்'
டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் இந்திய அணி கேப்டனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் முத்கல் கமிட்டியிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் முத்கல் கமிட்டியின் அறிக்கை மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. முத்கல் கமிட்டி அறிக்கையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருந்தது.
ஆனால் சீனிவாசன் பதவி விலகவில்லை. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது விசாரணை முடியும் வரை சீனிவாசன் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
அப்போது, கிரிக்கெட்டின் நலன் கருத்தி உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸின் பணியாளர். அவர் முத்கல் கமிட்டியிடம் வாக்குமூலம் கொடுத்த போது, குருநாத் மெய்யப்பன் ஒரு ஜாலிக்காகத்தான் பெட் கட்டியதாக கூறியிருக்கிறார். ஆனால் முத்கல் கமிட்டியோ குருநாத் மெய்யப்பன் முழு வீச்சில்தான் பிக்ஸிங், பெட்டிங்கில் ஈடுபட்டார் என்று கூறிகிறது.
ஆகையால் கேப்டன் டோணி, குருநாத் மெய்யப்பனைக் காப்பாற்றும் வகையில் பொய்யான ஒரு வாக்குமூலத்தை முத்கல் கமிட்டியிடம் தெரிவித்திருக்கிறார், அவருக்கும் இந்த பிக்ஸிங் குற்றத்தில் தொடர்பு இருக்க்கிறது என்று வாதாடினார்.